“நீ இலட்சியவாதி என்பதை
நான் அறிவேன்... ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும்,
இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ
மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிச்சொல்
ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்;
தீர யோசித்து முடிவு செய்!” என்று என் நண்பன் கூறினான்.
உண்மைதான்! உலகம் என்னென்னவோ பேசும்! ஆனால் நாம் நமது
மனத்திற்குச் சரி என்று பட்டதைச் செய்யும்போது, பயமும்
கவலையும் ஏன் ஏற்பட வேண்டும்? என்று எண்ணினேன் - மேலும்,
தங்கையின் பொருட்டு என் நண்பன் தடை பல வரினும் எதிர்த்து
நின்று எனக்குத் துணைபுரிவானல்லவா என்ற தைரியம் வேறு எனக்கு!
எனவே, “அச்சம் வேண்டாம். ராதாவுக்காக நான் எதையும் ஏற்கத்
தயார்” என்றேன். “மகிழ்ச்சி - நண்பா! - மட்டற்ற மகிழ்ச்சி
- என் இதயத்தைக் குத்திக் கொண்டிருந்த ‘முள்’ எடுபடும்,
உன் தீரச் செயலால்” என்று நாகசுந்தரம் மன எழுச்சியுடன்.
அவனிடம் அவ்வளவு தைரியமாகப் பேசிவிட்டேனல்லவா - தனியாக
இருக்கும் போதும் திகில் ஏற்படத்தான் செய்தது. பர்மா
நாயுடு ஒருவர் - அவருடைய மகள் இந்த ராதா - என்ற பொய்யைத்தான்
கூறியாக வேண்டும். உண்மையைக் கூறுவது என்றால், கோட்டையூரார்
குடும்ப இரகசியங்கள் அம்பலம் வரும். நண்பன் நாகசுந்தரத்துக்குத்
தாங்க முடியாத அவமானம் ஏற்படும்.
விபசாரியின் மகள் என்று தெரிந்திருந்தும், நான், ராதாவை
என் குடும்ப விளக்காக்கிக் கொள்ளச் சம்மதிக்கும்போது
- சூழ்நிலையால், ஒரு முதியவரின் பேராசையால், விபசாரப்
படுகுழியில் தள்ளப்பட்ட அம்மையை - தன் “தாய்” என்று தைரியமாகக்
கூறி, அதனால் ஏற்படும் இழிவையும் ஏசலையும், ஏன் என் நண்பன்
தாங்கிக் கொள்ளக் கூடாது! - என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு.
ஆனால் நோடியாக, நாகனைக் கேட்கத் தைரியம் வருவதில்லை.
தக்க சமயம் வந்ததும் திருமணம் நடத்திக் கொள்வது என்பதற்காக
அல்ல, நான் காத்துக் கொண்டிருந்தது. என் மனதிலே காதல்
அரும்பு மலராகிவிட்டது - எனினும் ராதாவின் மனம் எப்படியோ,
அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகவே
காலம் கடத்தி வந்தேன். என் நண்பன், ஜாடைமாடையாகக் கூறிவிட்டிருப்பான்
போலிருக்கு தன் தாயாருக்கு. அந்த அம்மை, என்னைத் தனி
அன்புடன் உபசரிக்கத் தொடங்கினார்கள். பர்மா நாயுடுவும்
எனக்குப் பழக்கமாகிவிட்டார். நெருங்கிப் பழகப் பழக, அவரும்
சூழ்நிலையால் கெட்டுப் போனவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
சூது தெரியாதவர். வாழும் வகையறிதாவர். யாரையும் சுலபத்திலே
நம்பிவிடுவார் - திடீரென்று விரோதம் பாராட்டுவார் - காரணமே
இருக்காது.
ஒரு நாள் என் நண்பன் நாகசுந்தரம், “ஏன் ஏதாவது சிறு தொழிலே,
வியாபாரமோ செய்யக்கூடாது? குடும்பம் கொந்தளித்தபடியே
இருக்கலாமா? நாலு பேர் பார்த்து மெச்சும்படியான நிலையில்
இருக்க வேண்டாமா?” - என்று புத்தி கூறினான் - வந்துவிட்டது
கோபம், பர்மா நாயுடுவுக்கு. “தம்பி; ஏதோ நீ கொஞ்சம்
பணம் கொடுத்து உதவி செய்கிற காரணத்தாலேயே என்ன பேசினாலும்
கேட்டுக் கொள்வேன் என்று எண்ணிக் கொள்ளாதே. நான் மகா
ரோஷக்காரன். மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன். என்னைக்
கேவலம் உன் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன்
என்று எண்ணிவிட்டாய் - இதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.
பார் இன்னும் இரண்டோர் மாதங்களில், பவுன் பவுனாகக் குவித்துக்
காட்டுகிறேன். பணம் சேகரிக்கும் வித்தை எனக்குத் தெரியும்”
என்று படபடவெனப் பேசிவிட்டார். என் நண்பன் மிகவும் மனவேதனைப்
பட்டான். நான்தான் தக்க சமாதானம் கூறினேன்.
கோபத்தின் காரணமாக, என் நண்பனிடம், பர்மா நாயுடு, பிறகு
பணமே கேட்பதை நிறுத்திக் கொண்டார் என்று எண்ணுகிறீர்களா?
அதுதான் கிடையாது! நாலு நாட்களிலே கோபம் போய்விட்டது.
“தம்பி! உன்னைத் தவிர வேறு யார் எனக்குத் குலதெய்வம்”
என்று பேச ஆரம்பித்தார். என் நண்பன் மிகுந்த சிரமப்பட்டு
பர்மா நாயுடுவை ‘வியாபாரி’யாக்கினான். அதிக இலபாகம் வரக்
கூடியது அல்ல என்ற போதிலும், ஏதோ கௌரவமாகக் குடும்பம்
நடத்தப் போதுமானதாக இருந்தது.
ராதாவுக்கும் எனக்கும் காதல் எவ்வளவு வேகமாக வளர்ந்து
வந்ததோ, அதைவிட வேகமாக நாகசுந்தரத்துக்கும் அவன் தகப்பனாருக்கும்
மனபேதம் வளரலாயிற்று.
காசி யாத்திரைக்குப் பிறகு, கோட்டையூரார், பூச்சும் பஜனையும்
அதிகமாக்கிக் கொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும், வீட்டிலே
சத்கதா காலட்சேபம்! சிறு சிறு கோயில்களிலே எல்லாம், உற்சவங்கள்!
கோட்டையூரார் பெரிய ‘பக்திமான்’ ஆகிவிட்டார் என்று பலரும்
பேசிக் கொண்டனர்; புகழ்ந்தனர்.
நாகசுந்தரம், கோட்டையூராரின் கொடுஞ் செயலைத் தெரிந்து
கொண்டதால், அவனுக்கு அவரிடம் இருந்து வந்த பயம், பாசம்,
மதிப்பு யாவும் பறந்துவிட்டன. அவருடன் சரியாகப் பேசுவதுமில்லை
- பேச நேரிட்டாலும், கண்டிப்புக் குரலில்தான்! அவர் திடுக்கிட்டுப்
போனார், தன் மகனின் குணம் மாறிவிட்டது கண்டு. அவர் என்ன
கண்டார், மகன். தந்தையின் ‘திருக்கலியாண’ குணத்தைத் தெரிந்து
கொண்டதன் விளைவு இது என்று.
கோட்டையூரர் கணக்கேட்டைப் புரட்டிப் பார்த்து, “நாகா!
இதென்ன 300 உன் பேரில் எழுதியிருக்கிறாயே?” என்று கேட்பார்.
“ஆமாம், என் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்” என்று தயக்கமின்றி
நாகசுந்தரம் பதில் கூறுவான். கோபம், கோட்டையூராருக்கு.
எனினும் அடக்கிக் கொண்டு, “என்னடா செலவு 300-க்கு? மோட்டார்
சைக்கிள் வாங்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே
அதற்கா?” என்று விளக்கம் கேட்பார். “அதெல்லாம் இல்லை.
என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்” என்று கூறுவான்,
நாகசுந்தரம். கோட்டையூரார் மிரள மிரள விழிப்பார்.
அதட்டிப் பார்த்தார். அவன் முறைத்திடலானான்.
புத்தி கூறிப் பார்த்தார், அவன் அலட்சியப்படுத்தினான்.
சலித்துக் கொண்டார், அவன் சட்டை செய்வதாக இல்லை.
“மகனா இவன்! என்னை உயிரோடு வேகவைக்கும் மகாபாதகன். என்ன
பாபமெல்லாம் உருண்டு திரண்டு, இவன் உருவாகி வந்து என்னை
வாட்டுகிறது” என்று கலக்கத்துடன் பேசலானார்.
ஏறக்குறைய 5,000 ரூபாய்க்கு இருக்கும், நாகசுந்தரம், ‘சொந்தச்
செலவு’க்கு என்று கணக்கு எழுதி எடுத்திருந்த தொகை.
“சொந்தச் செலவு! ஐந்து அல்ல பத்து அல்ல! நூறு இருநூறு
அல்ல - 5 ஆயிரம். இவருக்குச் சொந்தச் செலவு - கவர்னர்
பிரபு!” - என்று மனம் கொதித்துக் கூறுவார் கோட்டையூரார்
- காதில் வாங்கிக் கொள்வதில்லை நாகசுந்தரம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் - முடியாத நிலையில்
கோட்டையூரார், என்னைக் கூப்பிட்டனுப்பி, தன் மகனைப் பற்றிக்
கூறலானார்.
“போடா அப்பா. போய், அந்த சத்யசுந்தர். என்ன கூறி அழுகிறாரோ
அதைக் கேட்டு, அவருக்குச் சாந்தியும் சாமாதானமும் ஏற்படும்படி
செய்துவிட்டு வா” என்று நாகசுந்தரம் கேலி செய்தான், நான்
கோட்டையூராரைப் பார்க்கப் போவது தெரிந்து.
“தாகத்துக்குச் சாப்பிடுகிறாயா தம்பி! இளநீர்” என்ற அட்டவணையுடன்
கோட்டையூரார் பேச்சைத் துவக்கினார். பைத்யக்காரர்! அவர்,
உலகினர் கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த “இரகசியங்கள்”
யாவும் எனக்கும் நாகனுக்கும் தெரியும் என்பதை அவர் என்ன
கண்டார். கைலாயத்துக்கு அப்போதுதான் போய்ப் பார்த்துவிட்டு,
பரமன் அருள் பெற்றுக்கொண்டு வந்த பரமபக்தர் போலப் பேசலானார்.
இடையிடையே ‘சங்கரனை’ச் சாட்சிக்கு இழுத்த படி! “தம்பி!
கோட்டையூரார் குடும்பம் என்றால் சகலரும் மதிக்கக்கூடிய
நிலைமைக்கு. ஏதோ நான் பாடுபட்டுப் பகலென்றும் இரவென்றும்
பாராமல் உழைத்துக் கொண்டு வந்தேன். என் சுபாவம் எல்லோருக்கும்
தெரியும். கஞ்சன் அல்ல! ஆனால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை
வாரி இறைப்பவனுமல்ல! பழமொழி சொல்வார்களல்லவா, ஆற்றிலே
போட்டாலும் அளந்து போடு, என்று - அதுபோல எதற்கும் ஒரு
அளவு, காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன். கஷ்டப்பட்டு,
யாரையும் மோசம் செய்யாமல் சேர்த்த சொத்து - அதனாலேதான்
எனக்குக் கொஞ்சம் அக்கறை, சொத்து பாழாகக்கூடாது என்பதிலே.
ஊருக்கு உபகாரியாக, இவ்வளவு காலம், மதிப்போடு வாழ்ந்துவிட்டேன்.
இப்போது வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலும்
வைத்துக் கொண்டு இருக்கிற சமயம். இந்தச் சமயத்திலே, நாகசுந்தரம்,
என்னை இம்சிக்கிறான். அவனுடைய பேச்சும் போக்கும் எனக்குத்
தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது. வாலிபப் பருவம்
- பொறுப்பு தெரியாது. அதனால் கொஞ்சம் ஆடுகிறான் என்று
நானாகச் சமாதானம் செய்து கொண்டேன் - முதலில். என்னால்
சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு விஷயம் வளர்ந்துவிட்டது.
தம்பீ! நீயும் ஏதோ நாலு காசு உள்ள இடத்திலேதான் வளருகிறாய்.
நீயே சொல்லு, சொந்தச் செலவுக்கென்று ஆறு மாதத்திலே ஐயாயிரம்
எடுத்துக் கொள்ளலாமா? இந்த அக்ரமத்தை எப்படிச் சகித்துக்
கொள்வது? யார் சகித்துக் கொள்ள முடியும்? உன்னைப் போன்ற
நல்லவர்களோடு பழகியும், இவன் இப்படியா கெட்டுக் கீரை
வழியாவது? ஐயாயிரம் ஏனடா எடுத்தே என்று கேட்டால், ஏதாவது
அடக்கமான பதில் கூற வேண்டுமே! கிடையாது! ஆமாம் - என் சொந்தச்
செலவு! என்று கூறுகிறான். ஊரிலே, இது வரையிலே எவனும் என்னிடம்
பேசினதில்லை இதுபோல! இவன் பேசுகிறான்! ஐயாயிரம் சொந்தச்
செலவாம் - கேட்டாயடா தம்பி! சொந்தச் செலவு ஐயாயிரம் -
வயிறு எரியாதா எனக்கு. இதைவிட நான் தூங்குகிறபோது என்
தலைமேலே கல்லைப் போட்டுச் சாகடித்துவிடலாமே. போக்கிரி
சாக்கிரி - குடியன் வெறியனெல்லாம்கூட, கோட்டையூராரிடம்
வாலாட்டக் கூடாது. ஒட்ட நறுக்கி விடுவார் என்று பயந்து
பேசும் - இந்தப் பய, ஒரு காசுக்குப் பயன் கிடையாது, பேரேடு
பதியத் தெரியாது, எந்த மாதம் விதை போடணும், எந்த மாதம்
அறுவடைக்குப் போக வேணும் என்கிறது தெரியாது. இப்படிப்பட்ட
பயலுக்கு, ஐயாயிரம் தேவைப்படுதாம் தம்பீ! சொந்தச் செலவுக்கு!!
விவரம் கேட்டா, “ரௌடி” போல முறைத்துப் பார்க்கிறான்
என்னை! கோபத்தாலே, ஏதாவது இரண்டு வார்த்தை நான் கடுமையாகச்
சொல்லிவிட்டா, என்னை அடித்து விடுவான் போலிருக்கு! இவ்வளவு
கெட்டுப் போயிருக்கிறான்! நான் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கப்
போவதில்லை. கடைசியாக உன்னிடம் சொல்லிவிட்டேன். நீ அவனுக்குத்
தகுந்த புத்திமதி சொல்லு - திருந்திக் கொள்ளப் போகிறானா
இல்லையா என்று தீர்மானமாகக் கேட்டுவிடு பிறகு நான் என்னாலானதைப்
பார்த்துக் கொள்கிறேன் - அவனும் அவனுடைய கைவரிசையைக்
காட்டிப் பார்க்கட்டும் கோட்டையூராரோடு மோதிக் கொண்டு
நாசமாகிப் போனவர்கள் பல பேர்! இவன், பொடிப்பய - இவனும்
வேண்டுமானாலும் பார்க்கட்டும். இவ்வளவுதான் நான் சொல்லக்கூடியது;
நீ, புத்தியுள்ளவன் - பொறுப்பு அறிந்தவன் - உன்னாலேதான்
அவனைத் திருத்த முடியும்’ என்று கோட்டையூரார் கூறி, ‘தம்பீ!
தாகத்துக்கு ஏதேனும் வேண்டுமா?” என்ற முடிவுரையுடன், தமது
பேச்சை முடித்துக்கொண்டார்.
கோட்டையூராரின் கோபத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை
- யாருக்கும் ஏற்படத்தானே செய்யும் தன் மகன், பணத்தைப்
பாழாக்குவது தெரிந்தால் கொடுமை பல செய்து, அட்டூழியங்கள்
அநேகம் செய்து, கட்டினவளைத் துரோகம் செய்து, பராரியாக்கி,
விபசாரியாகும்படி துரத்திய ஆசாமி, எவ்வளவு யோக்யர் போல,
கண்ணியவன் போலப் பேசுகிறார் - எப்படி முடிகிறது இப்படிப்
பகல் வேஷமிட என்பதை எண்ணித்தான் ஆச்சரியப்பட்டேன்.
“போடா, முட்டாளே! மளமளவென்று உண்மையை எடுத்து வீசி, வாயை
அடக்காமல், அவர் கூறிக்கொண்டிருந்த கட்டுக் கதைகளைக்
கேட்டுக்கொண்டிருந்துவிட்டு வரு
கிறாயே!” என்று நாகசுந்தரம் என் மீது கோபித்துக் கொண்டான்,
நான் தூது போய்வந்த விவரம் கூறினதும். கோட்டையூரார்
என்னிடம் முறையிட்டும் பயனில்லை என்பதைக் கண்டு கொண்டான
பிறகு, சில நாட்கள் நேரடியாகவே, நாகசுந்தரத்தைத் தாறுமாறாகத்
‘திட்டி’ப் பார்த்தார் - அதிலும் பலன் ஏற்படவில்லை. பிறகு,
கடைசி பாணத்தைப் பிரயோகித்தார் - வக்கீல் விருத்தாலச
ஐயர் அந்தப் பாணத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அது இது:
நோட்டீஸ்
இதனால், சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில், என் மகன் நாகசுந்தரம்,
சிலருடைய துர்ப்போதனையால், குடி, கூத்தி, சூதாட்டம் போன்ற
கெட்ட காரியங்களில் ஈடுபட்டு, சொத்தைப் பாழாக்குவதால்,அவனை
நான், குடும்பத்திலிருந்து வெளியேற்றிவிட்டேன். அவனிடம்
‘விடுதலை’ப் பத்திரமும், எழுதி வாங்கியாகி விட்டது. அவனுக்கும்,
என் குடும்பச் சொத்துக்கும் இனி ஒரு சம்பந்தமும் கிடையாது.
இதை அறியாது, யாராவது அவனுக்குக் கடன் கொடுத்தால், அதற்கு
நான் ஜவாப்தாரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
கோட்டையூர் - தர்மலிங்க முதலியார
்இந்த ‘நோட்டீஸ்’ தயாரித்து என்னிடம் கொடுத்தனுப்பினார்
கோட்டையூரார் - இது அடுத்த வெள்ளிக்கிழமை, எல்லா பத்திரிகைகளிலும்
வெளியிடப் போகிறேன் - கடைசி முறையாக நீ கூறிவிடு, திருந்தப்
போகிறானா, அல்லது ஊர் சிரிக்க வைக்கட்டுமா என்று கேட்டுச்
சொல்லிவிடு - என்றெல்லாம் ‘சேதியும்’ சொல்லி அனுப்பினார்.
நாகசுந்தரத்தின் நற்பெயருக்கு இந்த நோட்டீஸ்’ எவ்வளவு
கோவலத்தை உண்டாக்கும் என்பதை எண்ணி நான் பதைத்துப் போனேன்.
- நாகசுந்தரத்திடம் இதைக் கூறினேன் - அவன் விழுந்து விழுந்து
சிரித்தான் - சிரித்துவிட்டு, ஒரு காகிதத்தில், ஏதோ எழுதி
என்னிடம் கொடுத்துவிட்டு’ “சொல்லு அவரிடம், வக்கீல்
நோட்டீஸ் வெளிவந்த மறுதினம் இந்த விளம்பரமும் வெளிவரும்
என்று” எனக்கு கூறினான். தந்த விளம்பரம் இது:
ஒரே ஸ்பெஷல் நாடகம்
*
தமக்கையை மணம் செய்துகொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு,
தங்கையை மணம் செய்துகொள்ள எண்ணி மனைவியைச் சித்திரவதை
செய்த மகானுபாவர் யார்?
*
உயிரோடு இருப்பவரைச் செத்ததாகக் கதை கட்டிய கண்ணியன்
யார்?
*
பிச்சைக்கு வந்த கிழவி பிணமான மர்மம் என்ன?
*
பேய் பிடித்ததாகப் பொய் சொன்ன பேயன் யார்?
*
முதலிய அதி அற்புத மர்மங்களை விளக்கிடும்,
கோட்டையூர்க் கொலைகாரன் என்ற அற்புதமான நாடகத்தைச் சீர்திருத்த
நாடக சபையார் விரைவில் நடத்திக் காட்டுவார்கள்.
நாகசுந்தரம், காண்ட்ராக்டர்.
என் நண்பனின் சாமர்த்தியம் தக்க பலன் தந்தது. கோட்டையூரார்,
இடி கேட்ட நாகமானார், இந்தக் காகிதக் கணையை நான் வீசினதும்.
கண்களில் மிரட்சி - வாய் குளறலாயிற்று - உடல் நடுங்கிற்று.
“ஐயாயிரம் - கூத்திக்கும் குடிக்கும் போகவில்லை - தங்களால்
சித்திரவதை செய்யப்பட்ட ரங்கம்மாளின் குடும்பத்துக்குத்தான்
போயிருக்கிறது” என்று விளக்கலானேன்.
“ரங்கம்! ரங்கம், இங்கா இருக்கிறாள்? என் மகனுக்கு எல்லாம்
தெரிந்துவிட்டதா - ஐயையோ!” - என்று அலறினார் - படுத்தார்
- அவருக்கு நெடுநட்களாக இருந்து வந்த பச்சை வாத நோய்
தாக்கிற்று - கை கால் வரவில்லை - சரியாகப் பேச முடியவில்லையோ
தவிர, அவர் மனதிலே, என்னென்ன எண்ணங்கள் தோன்றின என்பதை
- அவர் பொழிந்த கண்ணீர் காட்டிற்று.
நாகசுந்தரம் கோட்டையூராருக்கு வந்துற்ற கொடிய வியாதியைப்
போக்கப் பல மருத்துவர்களை ஏற்பாடுசெய்தான் - பலன் இல்லை.
ரங்கமாளுக்குச் சகல விஷயமும் கூறப்பட்டது - வருந்தினார்கள்;
ஒரு முறையாவது அவரைப் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டும்
என்று கூறினார்கள் - நாகசுந்தரம் “வேண்டாம், அம்மா! உங்களைப்
பார்த்தால், ஏற்படக் கூடிய மன அதிர்ச்சி
யாலே, அவர் இறந்துவிடக் கூடும்” என்று கூறித் தடுத்தான்.
‘தொடர் தொடராகத் துன்பங்களைத் தாங்கித் தாங்கிப் பழக்கமாகிவிட்டது.
நாகு! - இதையும் தாங்கிக் கொள்கிறேன் - வேறென்ன செய்ய
முடியும்” என்று ரங்கம்மாள் சோகமாகக் கூறினார்கள்.