அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


ரங்கோன் ராதா
17
             

“சிந்தாமணி, பெண்ணல்லடி” என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன! என்ன?” என்று கேட்டேன். திகைப்புண்டு கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்துத் தழுவிக் கொண்டு, “பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, அது வேண்டாம் சிந்தாமணி, சிந்தாமணி என்று உன் புருஷனும் அந்த உருட்டுக் கண்ணனும் பேசிக் கொண்டது ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. உன் புருஷனுக்கு இருக்கும் பேராசையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் எந்த எத்தன், ஏதோ ஓர் வகையான குளிகை செய்து தருவதாகவும், அது இருக்குமானால் நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்பதெல்லாம் கிடைக்கும் என்றும், அதன் பெயர் சிந்தாமணி என்றும் சொல்லி, ஏமாற்றி இருக்கிறான். நீ வெளியே சென்றிருந்தபோது, அவனும் உன் புருஷனும் இந்த விஷயமாகக் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர். அதனால்தான் தெரிந்து கொள்ள முடிந்தது” என்றாள். என் திகைப்பு நீங்கவில்லை. “நிஜமாகத் தானா அல்லது அவர்கள் பேசியதைத் தவறாக நீ அர்த்தம் செய்து கொண்டாயா” என்று நான் பன்னிப் பன்னிக் கேட்டேன். “தவறாகத்தான் நாம் இருவரும் இதுவரையிலே அர்த்தம் செய்து கொண்டோம். சிந்தாமணி என்ற பேச்சை, அரை குறையாகக் கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தப்பு எண்ணம் கொண்டிருந்தோம். பாவம்! நீ மனதை ரொம்பக் குழப்பிக் கொண்டாய்” என்றாள் கிழவி. என் மனம் சமாதானப்படவில்லை. எப்படியாகும்? சிந்தாமணி, சிந்தாமணி என்று அவர் அடி மூச்சுக் குரலிலே பேசியதைக் கேட்டவள் நான். சிந்தாமணிக்குத் தனி ஜாகை வேண்டும் என்றும், சிந்தாமணி நிச்சயமாகச் சில நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன், கவலை வேண்டாம் என்றும், அந்த உருட்டுக்கண்ணன் உரைத்ததையும் கேட்டிருக்கிறேன். சிந்தாமணி பெண் அல்ல, என்று இப்போது கிழவி கண்டு பிடித்ததாகக் கூறினால், எப்படி எனக்கு நம்பிக்கை பிறக்கும். குழம்பினேன். “ஆமாம்! எப்படி நீ, சிந்தாமணி பெண்ணல்ல, பொருள் - கேட்டதைத் தரும் மாந்திரீகக் குளிகை என்று கண்டு பிடித்தாய்! அப்படி நீ கண்டுபிடிக்கக் கூடிய விதத்திலே அவர்கள் என்ன பேசினார்கள், விவரமாகக் கூறு” என்று நான் கேட்டேன்.

“பைத்யமே! கவலைப்படாதே. சிந்தாமணியை வைத்து வைக்கத் தங்கத்தால் பெட்டி செய்வதா? வெள்ளியால் செய்வதா?” என்று உன் புருஷன் கேட்டார். அந்த எத்தன், தங்கத்தால் செய்வது நல்லது என்றான். அளவு எப்படி என்று உன் புருஷர் கேட்டார். அரை ஜாணுக்கு அரை ஜாண் இருந்தால் போதும் என்றான் எத்தன். இன்னும் என்ன வேண்டும், சிந்தாமணி பொருள்தான், பெண்ணல்ல என்பதை விளக்க. உனக்குச் சக்களத்தியாக வருபவள் அரை ஜாணுக்கு, அரை ஜான் அளவா இருப்பாள்! அப்படிப்பட்ட அளவிலே எலிக்குட்டி இருக்கும்; பெண் இருக்க முடியுமா?” என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

“என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லையா, நீ சொல்வது? இதையா, இவ்வளவு இரகசியமாகப் பேசி இருப்பார்கள்?” என்று நான் கேட்டேன். “ஆமாடி அம்மா, இதே தான். உன் புருஷர் கேட்டார், இந்தச் சிந்தாமணி இன்னும் எவ்வளவு பேரிடம் இருக்கிறது என்று. அந்த எத்தன் ஒரு நாலைந்து ராஜாக்கள் பேர் கூறி அவர்களிடமெல்லாம் சிந்தாமணி இருப்பதாகச் சொன்னான். இன்னமுமா சந்தேகம்!”

கிழவி இவைகளைக் கூறிக்கொண்டு வரும்போதெல்லாம் என் மனதிலே, ரட்சை, தாயத்து, மந்திரித்த கயிறு, குளிகை இவைகளைப் பற்றி ஜனங்கள் ஆவலாகப் பேசுவது, பித்தளையைப் பொன்னாக்கும் இரசவாதத்தைப் பற்றிய பிரேமை இருப்பது, மாந்திரீக மை, அதைத் தடவிக் கொண்டால் யார் கண்ணிலும் படாமல் இருப்பது காணாததைக் கண்டெடுப்பது, புதையலைக் கண்டுபிடிப்பது, என்று இப்படி எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வார்களே, இதெல்லாம் கவனத்திற்கு வந்தது. இது போலவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஒரு வஸ்து இருக்கிறது. அதன் பெயர் சிந்தாமணி, என்று அந்த எத்தன் ஏமாற்றியிருப்பான். பணப்பித்தம் தலைக்கேறிய என் புருஷர், அதை நம்பி இருப்பார், என்ற நம்பிக்கை உண்டாக ஆரம்பித்தது என்றாலும், மீண்டும் மீண்டும் கிழவியைச் சகல விவரத்தையும் கூறச் சொல்லிக் கேட்டேன். நெடுநேரத்துக்குப் பிறகே, எனக்குச் சிரிப்பு வந்தது. கிழவி கூறியதுபோல, நான் ஒரு பைத்யக்காரிதான் என்ற எண்ணம் நிலைத்தது. எதையோ, எதுவாகவோ எண்ணிக் கொண்டு ஏக்கம் கொண்டு மனதைப் புண்ணாக்கிக் கொண்டதுடன், தங்கத்திடன் வேறு இதைக் கூறி, அவளையும் சோகத்தில் விழச் செய்தேன். வீண் சந்தேகம் இவ்வளவு வேதனையைக் கொடுத்துவிட்டது! ஆனால் என்ன செய்வது! உன் அப்பாவின் போக்கும் சுபாவமும், என்னை அப்படி எல்லாம் எண்ணும்படி செய்தது. என்னுடைய அன்பை அபிஷேகித்து வந்தேன். அதுபோது தங்கத்தைத் தேடிக் கொண்டவர்தானே? அதுபோலச் சிந்தாமணி என்ற வேறோர் பெண்ணைத் தேடித்கொண்டு அலைகிறார் போலும் என்று நான் தீர்மானித்ததிலே தவறு என்ன? ஆண்களின் சுபாவம், பெண்ணை அப்படி எல்லாம் எண்ணச் செய்கிறது. தம்பி! ஒரு வேடிக்கை, நீ நினைத்துப் பார்.

“ஆஹா! அந்த அமிர்தா என்ன அழகு தெரியுமா!”

“சுந்தரி பாடினால், சொக்கிவிடுவேன் நான்.”

“கமலா ஆடினால், என் மனம் கூடவே ஆடும்.”

“அவள் கண்ணழகி! இவள் பேச்சழகி! இவள் நடை அழகி!”

இப்படி எல்லாம், ஆடவர்கள், சொந்த மனைவியிடமே தாராளமாகக் கூறுவர் - சகித்துக் கொண்டு அவள் கேட்டுக் கொண்டாக வேண்டும், முகம்கூடச் சுளிக்கக் கூடாது. வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள், வேறு மாதரைச் சுற்றி. இன்னும் சிலர், வேறு மாதர்களை வர்ணிப்பதோடு நிற்க மாட்டார்கள்.

“நீ இருக்கிறாயே சுடுமூஞ்சி! சுந்தரியின் முகத்தைப் பார்த்தாலே, இருக்கிற கஷ்டம் அத்தனையும் பறந்து போகுமடி.”

“நீயுந்தான் இருக்கிறே, நகைதாங்கியாக. இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆறு ரூபா சேலைதான். கையிலே கண்ணாடி வளையல், காதிலே ஒரு தொங்கட்டம். இவ்வளவுதாண்டி! எப்படி இருந்தா தெரியுமா? பார்த்த உடனே... என்னத்தைச் சொல்ல! நீ இருக்கிறாயே பட்டுச்சேலை கட்டினா பத்திரகாளி போல, நூல் சேலை கட்டினா மகமாயி போல;அவள் அழகும் குணமும்...

இப்படிப் பிற மாதரை வர்ணித்தும் தன் மனைவியைக் கேவலப்படுத்தியும் பேசுவர். அவள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, எவளாவது, எந்த ஆடவரையாவது, அவர் ரூபத்தைக் கூட அல்லது குணத்தைப் புகழ்ந்தாலும் போதும், ஆடவனின் முகம் கடுகடுக்கும், மனதிலே சந்தேகம் பிறக்கும். ரங்கோனில் ஒரு குடும்பம் தம்பி! நோயாளி மனைவி. ஒரு டாக்டர் வைத்தியம் செய்து வந்தார். “நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர். அவர் பேசுகிற அன்பான பேச்சே, பாதி நோயைத் தீர்த்துவிடும்” என்று சொன்னாள். அவ்வளவுதான். “சரி, சரி! பேசாமே கிட. உடம்பை அலட்டிக் கொள்ளாதே” என்று அதட்டினான் புருஷன். தம்பி! நீ ஆச்சரியப்படுவாய். மறுதினமே வேறே டாக்டர். இவ்வளவு சந்தேகமும், கோபமும், ஒரே ஒரு குற்றமில்லாத வார்த்தையை அவள் சொன்னதற்காகத்தான். இப்படிப்பட்டதுதானே ஆடவரின் சுபாவம்.

“இந்தச் சனியனைக் கட்டிக் கொண்டு அழுவதை விட!”

“என் தலையிலே கொண்டு வந்து தள்ளினார்களே.”

“முகத்திலே விழிக்காதே.”

“உன் முகத்துக்குப் பவுடர் வேறே கேக்குதோ?”

“நீ யாரடி என்னைக் கேள்வி கேட்க? எங்கே போனா உனக்கென்ன? எவளுடன் குலாவினா உனக்கு என்ன?”

இந்தப் பேச்சுக்கள் சர்வ சாதாரணமாகப் படித்த ஆடவர் கூறிக்கூட நான் கேட்டிருக்கிறேன் தம்பி. மனிதர்களைக்கூடத் தள்ளு தம்பி! நம்ம சாமிகள் கதையேகூட இப்படி இருக்கிறது. ராதா ஒரு நாள் சொன்னாள் எனக்கு ஒரு கதை. அந்த இந்திரன், யாரோ ரிஷிபத்னி அகலிகயைக் கெடுத்தானாமே; அவள் புருஷன் அவளைக் கல்லாகும்படி சபித்துவிட்டானாம். ஆனால் இந்திரனுடைய தப்பு நடத்தைக்காக, இந்திராணி ஏதாவது கண்டிக்க முடிந்ததோ - சாபம் கொடுக்கக் கூடத் தேவையில்லை - கண்டித்தாள், பேச மாட்டேன் என்றாள், என்றாவது கதை இரக்கிறதா என்று கேட்பாள்; அதுபோலத்தானே இருக்கிறது சகல கதைகளும். ஆண் சாமிகள் பெண் சாமிகளைப் பொம்மைகளாக்கிச் சில சமயங்களிலே கொடுமைப்படுத்தியதாக எல்லாம் கூடக் கதை இருக்கிறது. ஏன் இருக்காதம்மா? இநத்க் கதைகளை எல்லாம் யார் எழுதினார்கள்? ஆடவர்கள்தானே! என்று ராதா கூறுவாள். அப்படிப்பட்ட ஆடவர்களிலே, பேராசையும் கடுஞ்சித்தம் நயவஞ்சகமும் கொண்டவர் உன் அப்பா! அவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்றால் நான் சந்தேகிக்காமல் என்ன செய்ய முடியும்? நல்ல வேளையாக, சிந்தாமணி அவருடைய பெண்பித்தை அல்ல, பணப்பித்தைக் காட்டுகிறது என்பதைக் கிழவி கண்டறிந்து கூறி, என் மனதிலே நிம்மதி உண்டாகச் செய்தாள். முதலிலே எனக்குச் சந்தேகந்தான். என்றாலும் பிறகு தெளிவு பெற்றேன். பணத்தைப் பெறுவதற்கு, அவர் எதுவும் செய்வார். இல்லாவிட்டால் நல்லவர்கள்கூடச் சேர்த்துக் கொள்ளக் கூசும் அந்த உருட்டுக் கண்ணனுக்கு, ஏன் அவ்வளவு உபசாரம் செய்யப் போகிறார், உன் அப்பா. உபசாரம் செய்கிறார்.... அன்புடன் பேசுகிறார் - மரியாதை காட்டுகிறார் யாருக்காவது என்றால், சூட்சமம் இருக்கும். அவர்களால் ஆக வேண்டிய காரியம் ஏதாவது இருக்கும் - இலாபம் இல்லாமல் அன்பு காட்டவே மாட்டார். தங்கத்திடம் கொண்ட அன்புக்கே காரணம், பணந்தானே - இலாபந்தானே தம்பி! ஒரு வேடிக்கை கேள். ஒரு தடவை, நமக்குத் தூரபந்து ஒருவர் - கிழம் - பெரிய குடிகாரர் - குடித்துவிட்டால் கண்டபடி பேசுவார், -அவரைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது - என்னவோ வியாபாரம் செய்து இலாபம் கிடைத்ததாம் - அதைக் கொண்டு, நாலு ஏக்கர் நல்ல நஞ்சை வாங்கினார். அவருக்கு நோய் வந்தது. உன் அப்பா என்ன செய்தார் தெரியுமா? சதா அவர் வீட்டுக்குப் போவார் - வைத்தியரை அனுப்புவார் - பாவம்! அந்தக் கிழவனுக்கு யாரும் திக்கு இல்லை. ரங்கம்! கஞ்சி போட்டுக் கொடு, என்று எனக்குச் சொல்லுவார். எவ்வளவு அன்பு பார் முதலியாருக்கு, என்று இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் பேசிக் கொள்ளும். கடைசியிலே நடந்தது என்ன தெரியுமா? அந்தக் கிழவன் சாகும்போது, நிலத்தை எல்லாம், நெல்லியம்மன் கோயிலுக்கு, அபிஷேகச் செலவுக்கு என்று உயில் எழுதி, அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, உன் அப்பாவுடையது என்று எழுதிவிட்டான். அபிஷேகம் நடந்தது, ஆறு இளநீர், அஞ்சு பலம் எண்ணெய், ஆகக்கூடிய ஆறு ஏழு ரூபாய் செலவில். மற்றது உன் அப்பாவுக்குத் தான்! அப்படிப்பட்ட இலாப வேட்டைக்காரர் உன் அப்பா. அவர் ஏன் தேடமாட்டார் சிந்தாமணியை!

“ஒழியட்டும், நமது பயம் தீர்ந்தது” என்று நான் கிழவிக்குக் கூறினேன். “உன் பயம் தீர்ந்தது என்று சொல்லடியம்மா! சிந்தாமணி என்றொரு சக்களத்தி வந்து முளைப்பாளோ என்று நீ கொண்டிருந்த பயம் போய்விட்டது. ஆனால், எனக்கு அப்படியி“லலையே; இப்போது பயப்பட வேண்டியவள் நானடியம்மா நான்!” என்றாள் கிழவி. ‘ஏன்!’ என்று கேட்டேன். கிழவி பதில் கூறவில்லை. மிரட்சி நிரம்பிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்.

சிந்தாமணி, பெண்ணல்ல, யாரோ ஒரு புரட்டன் காட்டிய ஆசைக்குறி என்று சொன்ன கிழவி, பிறகு இனித் தனக்குத்தான் ஆபத்து என்று மிரட்சியுடன் கூறக் கேட்டு நான் திடுக்கிட்டேன். பன்னிப் பன்னி விவரம் கேட்டேன். விளக்கச் சொன்னேன்; கிழவி பதிலே சொல்லவில்லை. என் கவனத்தை வேறு வேறு விஷயங்களிலே திருப்பிவிட முனைந்தாள். எதையோ வாய் தவறிச் சொல்லிவிட்டுப் பிறகு, அதை மறைக்க மயல்வார்களே, அதுபோன்று இருந்தது. நானும் கெஞ்சினேன், கோவித்துக் கொண்டேன், மிரட்டினேன், சலித்துக் கொண்டேன், ஒன்றும் பலிக்கவில்லை. “ரங்கம்! திக்கற்றுக் தெருச் சுற்றிக் கொண்டிருந்த இந்தக் கிழவியை நீ காப்பாற்றினாய்; நீ சுகமாக வாழ வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. நான் வேறு என்ன செய்ய முடியும் உனக்கு. என்னால் முடிந்ததை எதைக் கொடுத்தாகிலும் செய்வேன். இது சத்தியம் எவ்வளவோ சுகமாக வாழ வேண்டிய உன்னைப் படாத பாடு படுத்திவிட்டான் உன் கணவன் - நீயும் எவ்வளவுதான் தாங்கிக் கொள்வாய். இவ்வளவு கஷ்டத்துக்கிடையேயும், உனக்கு எவ்வளவு நல்ல சுபாவம் இருக்கிறது. தெருவில் சுற்றும் நாய்கள் கூட என்னைக் கண்டு குரைத்தன. என் முகத்தைக் கண்டதும், கதவுகளைத் தாளிட்டு விடுவார்கள். நான் ஒரு வேண்டாப் பொருளாகிக் கிடந்தேன். என்னை நீ ஆதரித்தாய். இந்தக் உதவிக்கு ஈடாக என் உயிரையே கொடுத்தாலும் தகும்” என்ற நெஞ்சு உருகும் விதமாகக் கிழவி பேசினாள்.

முதலிலே ஆபத்து என்று சொன்னாள், பிறகு உயிரையும் கொடுக்கலாம், தகும், என்றாள். எனக்கு அவளுடைய பேச்சு பயமூட்டுவதாக இருந்தது. நெடுநேரம் முயன்றேன், அவளிடமிருந்து விளக்கம் பெற முடியவில்லை - சலிப்பு ஒரு புறம் - அத்துடன், சிந்தாமணி வருவாள் என்று கொண்டிருந்த பயம் போய்விட்டதால், மகிழ்ச்சியும் ஒருபுறம் இருந்தது. எனவே கிழவி விஷயத்தைக் கொஞ்சம் அலட்சியப்படுத்திவிட்டு, பிறகு கவனிக்கலாம் என்று விட்டுவிட்டு, என் மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியிலே மூழ்க ஆரம்பித்தேன். நான் அப்போது அறியேனடா கண்மணி, கிழவிக்கு உண்மையிலேயே ஆபத்து வர இருப்பதை.

மறுதினத்திலிருந்து உன் தகப்பனாரும் அந்த உருட்டுக் கண்ணனும் மிகச் சுறுசுறுப்பாக ஏதேதோ வேலை செய்தனர். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது அவர்கள் எண்ணம். மந்திரவாதி, உன் அப்பாவைத் தனக்குப் பரிபூரணமான அடிமையாக்கிக் கொண்டான். பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. கொஞ்சம் வாடைக்காற்று அடித்தாலும், உடனே குளிக்க வெந்நீர் போடச் சொல்கிற உன் அப்பா, அந்தப் பூஜையின் போதெல்லாம் ஈரத் துணியுடன், ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்கூட உட்காருவார்; தனி அறையிலே பூஜை நடக்கும்; நாங்கள் யாரும் பார்க்கக் கூடாது. நெடுநேரம் மெள்ள ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். பிறகு ஆவேசம் வந்தவன் போலச் சில விநாடி கூவுவான். அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் அவர் ஆடினார்.

நான் குறிப்பிட்டேனே முன்பு, “நான் பூவோடும் மஞ்சளோடும் போய்விட்ட ‘வெள்ளிக்கிழமை’ அதற்கு நாலு நாட்களுக்கு முன்பு, ஒரு இரவு நடுநிசி இருக்கும். விழித்துக் கொண்டோன்; வயிற்று வலியாக இருந்தது. புறக்கடைக்குப் போக வேண்மென்று தோன்றிற்று. கிழவியை எழுப்பித் துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று கிழவி படுத்திருந்த பக்கம் திரும்பினேன்; தம்பீ! கிழவி இல்லை. என் மனம் ‘கபீல்’ என்றாகிவிட்டது; உரக்கச் சத்தமிட்டேன். பதில் இல்லை. கைவிளக்கை எடுத்துக்கொண்டு தேடலானேன். புறக்கடைக் கதவு திறந்திருந்தது. விளக்கைக் கூடத்திலே வைத்துவிட்டு, அடிமேல் அடியெடுத்து வைத்து, சந்தடி செய்யாமல் சென்றேன். நான் கண்ட காட்சியை, மறக்கவே முடியாது இப்போது அதை எண்ணிக் கொண்டாலும் பயமாக இருக்கிறது. கிழவி பிணமாகக் கிடந்தாள்! அவளருகே ஒரு பெரிய நாகம், அதுவும் சாகடிக்கப்பட்டுக் கிடந்தது. உன் தகப்பனார், பிணத்தருகே உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ ஒரு கறுப்புத் துணியால் கட்டிவிடப்பட்டிருந்தது. மந்திரம் செய்ய வந்தவன் இல்லை; என் மனம் மருண்டது. சுற்று முற்றும் பார்த்தேன். இரு உருவங்கள். புறக்கடையின் கோடியிலே உலவிக் கொண்
டிருக்கக் கண்டேன். என் கணவரின் கண்களைக் கட்டிவிட்டு, மந்திரவாதி வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம் பேசுகிறான் என்று இரகசியம் பேசுகிறான் என்று யூகித்துக்கொண்டேன். பணத்தாசையால் புத்தியை இழந்துவிட்ட உன் தகப்பனார் அவன் சொல்லிக் கொடுத்த ஏதோ சொற்களைச் சில நிமிஷங்களுக்கொரு முறை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்! நரபலி! நரபலி! என்ற வார்த்தைகள் மட்டுமே, கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தன. விஷயமும் எனக்குப் புரியலாயிற்று. பெரிய புதையல் தேடுபவர்கள் தேவதைகளை வசியம் செய்வார்களென்றும், அப்போது, தேவதைக்கு நரபலி தருவது வாடிக்கை என்றும் பலர் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். சிந்தாமணியைப் பெறுவதற்காக, நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. ஆத்திரமும் அழுகையும் பொங்கிற்று. அடக்கிக் கொண்டேன். முழு விவரமும் தெரிய வேண்டுமே. அதனால், கிழவிதான் பலியாக்கப்பட்டாள். - பாம்பு செத்துக் கிடப்பானேன்? இந்தப் பாதகத்துக்குக் காரணமான இருப்பவன், வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம், அந்த இடத்தில் அந்த நேரத்தில், பேசுவானேன்? இந்த மர்மத்தைக் கண்டறிந்தாக வேண்டும் என்று துடித்தேன். எப்படியாவது, இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அருகே செல்ல வேண்டும். அவர்கள் அறியாமல், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு யுக்தி தோன்றிற்று. தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து, புறக்கடைப் பக்கம் துரத்திவிட்டு, நான் அங்கிருந்த ஒரு புதரிலே பதுங்கினேன், கன்று ஓடிற்று! உன் அப்பா அந்தச் சத்தத்தைக் கேட்டு, மந்திரத்தை வேக வேகமாகச் சொன்னார் - பாவம் - தேவதை வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது. சந்தடி கேட்டதும், மந்திரவாதி பயந்துவிட்டான் போலிருக்கிறது. பேசுவதை நிறுத்திவிட்டு, அவனும் அவனுடன் இருந்தவனும் கவனிக்கலாயினர். கன்று என்று தெரிந்ததும் சும்மா இருந்துவிட்டனர். கன்று அங்குமிங்கும் நடமாடிற்று. நான் அந்தச் சந்தடியைச் சாக்காக வைத்துக் கொண்டு, மெள்ள மெள்ள, புதர், செடி, கொடி இவைகளின் மறைவிலேயே நடந்து, நடந்து, அவர்கள் உலவிக் கொண்டிருந்த இடத்தருகே போய்ச் சேர்ந்தேன். எப்படித்தான் எனக்கு அந்தத் தைரியமும் தந்திரமும் பிறந்ததோ தெரியவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் தெளிவாகவே என் காதிலே விழுந்தது.

“போலீஸ் உடையைப் போட்டுக் கொள்வதுதானே. காரியத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டுமோ” என்றான் மந்திரவாதி.

“செய்வோம். நான்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எப்படி நம்புவான் அந்த ஆள். ஒரு சமயம், உண்மையான இன்ஸ்பெக்டர் அவனுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்வது...” என்றான் மற்றவன்.

“பைத்யண்டா உனக்கு, உடையைப் பார்த்ததுமே உளற ஆரம்பித்துவிடுவான், நீ ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லு” என்று தைரியமும் யோசனையும் தந்தான் புரட்டன்.

“எனக்கென்னமோ தைரியம் வரவில்லை” என்றான் மற்றவன். மந்திரக்காரன் தலையில் அடித்துக்கொண்டு, “சரி, உடையை என்னிடமே கொடுத்துத் தொலை; நானே காரியத்தை முடித்துவிடுகிறேன்; நீ போய்ச் சாவடியில் இரு. அங்கு கூட வேண்டாம்; ஊருக்கு வெளியே சென்று நமது மடத்திலே இரு; நான் வந்து சேருகிறேன். ஒட்டு மீசையும் கொடு” என்றான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவன் போய்விட்டான். இந்த ஜெகஜாலப் புரட்டன், போலீஸ் உடையுடன், என் கணவர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். நானும் மெள்ள வந்துவிட்டேன் அந்த இடத்தருகே. என் கணவர் கண் கட்டப்பட்டு, உட்கார்ந்திருந்தாரல்லவா? அவரருகே சென்று, கைப்பிரம்பால், ஒரு அடி கொடுத்துக் கட்டை அவிழ்த்தான். நரபலி! நரபலி! என்று முணுமுணுத்துக் கொண்டே உன் அப்பா, அடி கொடுத்தது யார் என்று பார்த்தார் - பார்த்ததும் “ஐயோ! போலீஸா?” என்று அலறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு மங்கலானது. புரட்டனின் வேஷமும் பொருத்தமாக இருந்தது - பீதி அடைந்துவிட்டார். அவன் வழக்கமான குரலையும் மாற்றி கொண்டு பேசலானான்.

“படுபாவி! கொலை! படுகொலை! எங்கே உன் கூட்டாளி.”

“ஐயோ! ஐயோ!”

இவ்வளவுதான். அதுவும் ஈனக்குரலில் வெளிவந்தது உன் தகப்பனாரின் வாயிலிருந்து. “தூக்குக் கிடைக்கும் துஷ்டா! பிணம்! பாம்பு! இதோ விசில் கொடுத்து ஜவான்களை வரவழைத்து...” என்று மிரட்டினான் புரட்டன். அப்படியே விழுந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டார் உன் தகப்பனார்.

“காலில் விழுந்தாலும் இல்லை, கோடி கோடியாக என் காலடியில் கொட்டினாலும் விட முடியாது. நான் ஏதோ பரிதாபப்பட்டு விட்டுவிட்டாலும், மேலதிகாரிகள் காதில் விழுந்தால் என்ன ஆகும்? நானும் மண் தின்ன வேண்டியதுதான்” என்றான்.

இந்தக் காட்சி நடந்துகொண்டே இருந்தபோது புறக்கடையின் கோடியில் வெகு தொலைவில், மினுக் மினுக்கென்று விளக்கொளி தெரிந்தது. விளக்கொளி வரவரப் பெரிதாகிக் கொண்டே வரலாயிற்று, நெருங்கலாயிற்று. நான்தான் முதலில் அதைக் கவனித்தேன்.

“நடடா! வாடா! ராஸ்கல்!” இப்படித் தொலைவிலே பேசும் குரல் கேட்டது - கேட்டதும், இருவரும் திடுக்கிட்டனர்.
“அட இழவே! யாரோ வருகிறார்களே! ரோந்துக்காரரோ?” என்று பதைபதைப்புடன் கூறிக்கொண்டே பாம்பைக் காலாலே புரட்டன் வீசித் தள்ளினான் ஒருபுறமாக. பிணத்தின் தலைப்பக்கம் போய் நின்றான். அவன் சொல்லாமலேயே கால் பக்கம் இவர் பிடித்தார். அவசர அவசரமாகப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நான் உள்ளே நுழையச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்குள் நாலைந்துபேர் ரோந்துக்காரர்கள், தோட்டத்துக்குள் நுழைந்தனர்.

“யாரது? ஐயோ! திருடர்!” என்று பலமாகக் கூவினேன்.

“அம்மா! அம்மா! பயப்படாதீர்கள்! திருடரல்ல; போலீஸ்! போலீஸ் நாங்கள்” என்று அவர்கள் கூறினர். நான், மங்கலாக இருந்த விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, “யார் போலீஸா?” என்று பயந்தவள்போலக் கேட்டேன். “ஆமாம்மா; ரோந்து வேலையாக இப்படிப் போனாம். இவன் யாரோ, திருட்டுப் பயல், இந்தப் பக்கமாக வந்தான். நமது வீட்டுத் தோட்டப்பக்கமாக வந்ததுபோல் தெரிந்தது. கேட்டதற்குச் சரியான பதில் தரவில்லை. சரி! இங்கேயே வந்து பார்ப்பது என்று வந்தோம்” என்றனர்.

“நான் அதைக் கண்டேனா? எனக்கு வயிற்றுவலி, தோட்டத்துக்கு வந்தேன்; திடீரென்று கும்பலாக வரவே, பயந்துவிட்டேன்; இவன் இந்தத் தோட்டத்திலிருந்து வந்திருக்க முடியாது. நான் இங்கு கொஞ்ச நேரமாகவே இருக்கிறேன்” என்று சொன்னேன். அவர்கள் நடுநிசியில் அங்கு வந்து நான் பயப்படும்படி நடந்துகொண்டதற்காக வருந்தி, அவனை விரட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

“முதலியார்...?” என்று கேள்வி போட்டான். அதிலே ஒரு புத்தியுள்ளவன்.

“அவருக்குத் தலைவலி” என்றேன் நான்.

அனைவரும் நெடுந்தூரம் போயான பிறகு, நான் விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். உன் தகப்பனார் அடியற்ற மரம்போல என் காலில் விழுந்தார். “ரங்கம்! ரங்கம்! என் பிராணனைக் காப்பாற்றினாயே! நீ எங்கே இருந்தாய்? எப்படி இங்கு திடீரென்று, இந்த நேரத்தில் வந்தாய்? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே! இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் பைத்யம் பிடித்து விடும் போலிருக்கிறதே” என்று பிரலாபித்தார். “கதவைத் தாளிடுங்கள் முதலில்; கைத்தடியைக் கொடுங்கள் இப்படி. குறுக்கே ஒன்றும் பேசாமல் என்னோடு வாருங்கள். போலீஸ் நாடகமாடினவன் எங்கே காட்டுங்கள்” என்று கூறிக் கொண்டே நடந்தேன் - கூறினேனா! கட்டளையிட்டேன். தான் சொன்னபடியே நடந்துகொண்டார். போலீஸாக தடித்த புரட்டனை ஒரு அறையில் தள்ளி வைத்திருந்தார். அந்த அறையைத் திறந்தார்; அவன் வெளியே வந்தான்.

“டே! ஒட்டு மீசையை எடு” என்று கூறிக்கொண்டே ஓங்கி அவன் மண்டைமீது அடித்தேன். தம்பி! அவன் ஒரே ஒரு முறைதான், “ஐயோ” என்று அலறினான். அலறிக் கொண்டே கீழே விழுந்தான். இரத்தம் ஆறாகப் பெருகிற்று. மூச்சில்லை, பேச்சில்லை; நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே-, ஒரு விநாடி நின்றோம்.

“ஒரே நாளில், ஒரே வீட்டில் இரண்டு கொலை” என்று நான் மெதுவாகக் கூறினேன்.

“இவன்...?” என்று பயந்து கேட்டான் உன் அப்பா.

“உமக்குச் சிந்தாமணி வாங்கித் தர வந்தவன் - கிழவியைக் கொன்றவன் - உம்மை மிரட்டிப் பணம் பறிக்கப் போலீஸாகவும் நடித்தவன்” - என்று நான் ஆத்திரத்துடன் கூறினேன். தலையில் கை வைத்துக்கொண்டு, அவர் உட்கார்ந்துவிட்டார். புரட்டன், செத்துவிட்டானா, மூர்ச்சையாகிவிட்டானா என்று கூடத் தெரியவில்லை. “கிழவி எங்கே?” என்று கேட்டேன், அறைக்குள்ளே கை காட்டினார்.

“தம்பி! அங்கு பிணம் கிடத்தப்பட்டிருந்தது.

“அறைக்குள்ளே, அவருடைய பேராசைக்குப் பலியான கிழவி; வெளியே, என் கோபத்தால் தாக்கப்பட்டுக் குற்றுயிரானவன்.