அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


விடுதலைப் போர்

அழைப்பு

தாய்நாட்டின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு, பணிபுரிபவனே, வீரன் விவேகி-அவனுடைய அறிவும் ஆற்றலும் அந்த அரும்பணிக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

உலக வரலாற்றுச் சுவடியிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட மாவீரர்களைப் பற்றிய செய்தியே, உன்னதமான பகுதி.

மணிமுடிதரித்து மன்னன் தங்கச்சிங்காதனத்தின் மீது வீற்றிருக்க, நடனமாதர் கடைகாட்டி இடை அசைத்து, அவனுக்கும் அவனை அண“டிப் பிழைக்கும் அலங்காரப் பொம“மைகட்கும் களிப்பூட்ட அக்காட்சியினை அகவலாகவோ, சிந்து ஆகவோ, ஆக்கிடும் புலவனின் கவிதைகளைவிட, தாய்நாட்டின் விடுதலைப் போருக்காகக் களம் புகுந்த காளை, தன் உடலிலே எதிரியின் வாள் பட்டால் வழிந்தோடும். இரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி, வீரப்போர் புரிந்து கீழே விழும்போதும், “என் நாட்டுக்காக நான் ஆற்றவேண்டிய கடமையைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம்”! என்று வீர முழக்கமிடும் ஒலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல மன எழுச்சி தரக்கூடியது.

விடுதலைப் போர், முடிவுற்று, அன்னை பாரத தேவி அரியாசனம் ஏறும் இந்நாள், முன்னாள் நடைபெற்ற காதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.

இது முன்னாள் காதையுமல்ல-இந்நாள் நடைபெறும் முடிசூட்டு விழாவினை ஒட்டிய விஷயமுமல்ல. இது, இந்நாள் ஏக்கம் நாளையதினம் நடத்தப்பட வேண்டிய பணிக்கான துவக்கம்.

விடுதலைப் போர் திராவிடத்தின் விடுதலைப்போர். இந்திய துணைக் கண்டத்து விடுதலைப்போர் எனும் பழங்கதை அல்ல.

பரங்கிக்கும்-பனியாவுக்கும் இடையே நடைபெற்ற போர், ஒருவாறு முடிவுபெற்றது-பனியாவுக்குப் பீடம் கிடைத்துவிட்டது. பீடம் ஏறும் பனியாவின் பிடியிலே சிக்கியுள்ள திராவிடம் இனித் தன் விடுதலைக்காகப் போரிட்டாக வேண்டும்.

திராவிடம், வெளிநாட்டானின் பிடியில் மட்டுமல்ல, அறியாமை‘யன் பிடியில், சிக்கிச் சிதைகிறது. இயற்கைச் செல்வத்தை எத்தர்கள் சுரண்டிச் செல்கின்றனர். சிந்தனையோ, அறியாமையோ கலை உருவிலே புகுத்திய கயவர் வழிவழி வந்தவர்கள், செல்லென அரித்து வருகின்றனர்.

தேய்ந்து வருகிறது திராவிடம்!

தெருவெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறது!

கடல் கடந்த நாடுகளிலே எல்லாம் திராவிடர்

கூலிகளாயினர்!

திராவிடத்தின் இந்நாள் நிலையினை எண்ணிடுவோர், ஒரு பெரும் விடுதலைப் போர் நடத்தியே தீர வேண்டும், என்ற முடிவுக்கு வந்தே தீருவர்.

ஒரு வஞ்சக ஏகாதிபத்தியம் இன்று திராவிடத்தைக் கொஞ்சிக் குலவி சொக்க வைக்கிறது-சேல் விழியும் பாதிமதியும் கொண்ட மங்கை நல்லாளை செல்வச் செருக்கும் வஞ்சக நினைப்பும் கொண்ட காமுகன், கனிமொழி பேசி ஏய்ப்பது போல.

பொருளாதாரபலமும், பிரசாரவசதியும் ஆயுத பலமும், அந்தணரின் ஆசீர்வாதபலமும் அமோகமாகக் கொண்டுள்ள வடநாட்டு ஏகாதிபத்தியத் தொடர்பை அறுத்துக் கொண்டு முப்புறம் கடலும், எப்புறமும் வளமும், அதனைப் பயன்படுத்தும் நாலரைக் கோடி மக்களும் கொண்ட திராவிடம் தன்னாட்சி பெற்றாக வேண்டும். அதுவே விடுதலைப்போரின் குறிக்கோள்!

இந்நூல் உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல-மாற்றுக் கட்சிக்காரரின் பார்வைக்கும் கூட.

-சி.என்.அண்ணாதுரை