அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

நசுக்கி விட்டால்

ஆசை காட்டினோம் மயங்கவில்லை!
அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை!
அவரும் இவரும் மாறினபோதும்
அணுவளவேனும் மாறவில்லை!
எதையும் துருவி ஆராய்ந்து
ஏழைக்கேற்றது எதுவென்று
இடித்துக் கேட்கிறார் எப்போதும்.
அப்பப்பா! பெருந்தொல்லை!
பிளவு ஏற்படும், சிதறிவிடும்
கலகம் மூளும், கருகிவிடும்

எனக் காத்திருந்தும் பயனில்லை.

பட்டிதொட்டிகள் போகின்றார்
பலப்பல உண்மை கூறிடவே!
வரிகள் போட்டிட முடியவில்லை.
வருமே எதிர்ப்பு எனும் பயத்தால்!
வறட்டுப் பயல்கள் என்றிருந்தோம்
இவர் வகையாய்ப் பணிபல புரிகின்றார்!
மக்கள் மனதில் இடம் பெற்று,
மாண்புகள் மிகுந்து திகழ்கின்றார்!
எத்தனை இலட்சம் ஆனாலும்
இவர்களை ஒழித்திட வேண்டுமம்மா!
இல்லை என்றால் நமது கதி என்னாகும்? அது
அதோகதி!
நம்மை நம்பி டாட்டாக்கள்
நோட்டு நோட்டாய் தந்துவிட்டார்.
வீட்டு விளக்கு அணையாமுன்
விரும்பும் செயல் செய வழி எது?
நாட்டைக் காத்திடத் துடிதுடிக்கும்
தி. மு. க.வை நசுக்கிவிட்டால்
நாடு நமது வேட்டைக்காடு!
நமக்கு ஏது பாரினில் ஈடு!
காங்கிரஸ் கருதுகிறது! இதுபோல!

(திராவிடநாடு - 03.12.1961)