அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாரதி பாதை!
எட்டையபுரத்திலே, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முக்கிய மண்டபம் அமைத்து, சீரிய முறையில் விழா நடத்தினர்.

பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வத்தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன், வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப் புதுப்பாதை வகுத்தார் பாரதியார்.

அவருக்குக் ‘காணிக்கை’ செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது, ஆச்சாரியார் வந்தார் - ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடினர் - ஆசைவாணர்கள் - கலைவாணர்கள் - எழுத்தாளர்கள் பற்பலர்.

‘கல்கி’ ஆசிரியர், இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார் - விழாச் சொற்பொழிவுகளில், நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.தூரன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறினார், “அதிகாரமற்ற கரம் ஆஸ்திவாரக்கல் நாட்டுக்கிறதே என்று ஆயாசப்பட்டேன் - இன்றோ, ஆளும் கரம், மணி மண்டபத்தைத் திறந்து வைக்கிறது கண்டு அகமகிழந்தேன்” என்று உண்மை வங்கமாளும் ஆச்சாரியார், மணி மண்டபத்தைத் திறந்தார் - வறுமையாளராகக் கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்டு, நலிவுற்றிருந்த பாரதியாருக்கு நாடு முழுவதும் கொண்டாடும் அளவினதான விழா நடந்தேறியது.

பாரதியாரின், கவிதைத் திறன், அதனால் பயன், மறுக்க முடியாதன. பாரதியாரின் தனிப்பண்புகளை, அவரை அந்நாளில் அறிந்தவர்கள் கேட்டால், புது உலகு காணவிழைபவர்களின் ஆகமெல்லாம் மகிழும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களிலே ஓர் புத்தொளி காணலாம்.

பாரதியாரின் காலம் வேறு, இக்காலம் வேறு எனவே, இன்றுள்ள எண்ணங்களை எல்லாம், அவர் அன்றே ஏய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய - திராவிட பிரச்சனையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர். ‘ஆரியர்’ என்ற சொல்ல, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக்காலம், நாமெல்லாம், பள்ளிகளில் ஆரிய மத ஊபாயக்யானம் எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நமது தலைவர், தமிழ்நாட்டுக் காங்கிரசிலே பெருந்தலைவராக இருந்த காலம்.

ஆரியர் - திராவிடர் பிரச்சனை, ஒரு ஆராய்ச்சி - வரலாறு - இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.

ஆரியம் ஓர்வகைக் கலாச்சாரம் - வாழ்க்கை முறை.

திராவிடம், அது போன்றே, தனியானதோர், வாழ்க்கை முறை.

இது, இன்று, விளக்கமாக்கப்படுவது போல, பாரதியாரின் நாட்களிலே கிடையாது.

பல ஜாதி - பல தெய்வ வணக்கம் - பற்பல விதமான மூடநம்பிக்கைகள் - தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு - இவைகள் தான், ஆரியம்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் இது திராவிடம்.
இரண்டிலே எது நல்லது, எந்தக் கலாச்சாரத்துக்கு, நீர் ஆதரவு தருவீர், என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை கேட்டிருந்தால், நிச்சயமாக அவர், திராவிட கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில் - பிற்காலப் பகுதிகளில் - இந்தச் சூழ்நிலை இருக்கக் காணலாம்.

பாரதியார் விஷயத்திலே பகுத்தறிவாளர்களுக்குள்ள, மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி, அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிவர் அருளாலோ, பஞ்சாட்சர உபதேச பலனாகவோ, பாட ஆரம்பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான்.

நாமகளைத் துதித்தார் - நாலைந்து ஆண்டு - பலன் இல்லை - பிறகோர் நாள், ஆம்மே! இனி நான் உயிர்வாழேன் என்று கூறி நாவை அறுத்துக் கொள்ளக் கிளம்பினார், உடனே களுக்கென ஓர் சிரிப்பொலி கேட்டது, ஆம்மை பிரச்சன்னமாகி பாலகா! பாடு! என்றாள் - உடனே அவர் பாடலானார் - பாடினார், பாடினார், பார் முழுதும் பாடல் பரவும் வரை பாடினார், என்று பாரதியார் புராணம் கட்டாத வரையில் நமக்கெல்லாம், மிகக் களிப்பு. நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதியாருக்கே உண்மையில், பெருமை, அவர், நாமகள், பூமகள், ஆலலது வேறோர் தேவனன் அருள் பெற்றவரல்ல, அவர் ஓர் கவி, சிந்தினையில் பட்டதைச் செந்தமிழில் கவிதையாக்கினவர் என்பதனால் தான்.

கூடுமானவரையில், பாரதி விழா சொற்பொழிவாளர்கள், அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைக்கையில், ‘புராணம்’ பேசாதிருந்ததுபற்றி, நாம் மகிழ்கிறோம். அன்பர் ஆச்சாரியார் மட்டும், பாரதியாரை, ஓர் ‘முனிவர்’ என்று கூறினார். ஆனால் அதற்கும் அவர், வழக்கமான பொருள் கூறத் துணியார்.

பாரதியாருக்குள்ள பெருமை முதலில் இது. மற்றோர் பெருமை, அவர் தம்முடைய நாட்களிலே, மற்றவர்களைவிட வேகமாக முன்னேற்றக் கருத்துக்களைப் பாடி, அதன் பயனாக, அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, ‘பார்ப்பன மேதைகள்’ ஏன்போரால் அலட்சியப்படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனமானாரே, அந்தப் பண்பு.

அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுகளை உடைத்தெறியக் கூடியதாக இருந்தது என்பது அவருடைய கவிதைகளிலே பல, ரசமான இடங்களில் தெரிகிறது.

அவருடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும், அந்த நாட்களில் நையாண்டி செய்யப்பட்டது, இன்று, அவருக்கு, மகாகவி என்ற பட்டம் தரவும், பளிங்கு மண்டபம் கட்டவும், தமிழகம் முன் வந்தது. கவிஞரைப் போற்றும் மாண்புக்கும், தைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக் காட்டிய கல்கியின் திறமைக்கும், நமது பாராட்டுதல்.

“பாரதி மண்டபத்தை விழாவுக்காகப் போடப்பட்ட பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று, அன்று ஆச்சாரியார் பேசினார்.

மண்டபத்தை, பந்தல் மறைக்கிறது!

மண்டபத்தை மட்டுமல்ல! தேசீயக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே, பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால், பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி, மறைக்கப்படுகிறது.

பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினார். ஆனால், தேவார திருவாசகமும், திருவாய் மொழியும் பாடியான பிறகு பாடினார் - எனவே, அவருடைய கவிதைகளிலே, தோத்திரப் பகுதி, முக்கியமோ, அவருடைய பெருமைக்குச் சான்றோ இகாது, வைதீகர்களின் நோக்கத்தின்படியே கூட.

பாரதியார், வேதாந்தப் பாடல்கள் பல பாடியுள்ளார் - ஆனால் அவருக்கு முன்னர், தாயுமானாரும், பட்டினத்தாரும், வள்ளலாரும், பாடிவிட்டனர் - எனவே, அந்தப் பகுதியும், பழைய பதிப்ப போன்றதுதான்.
அவருடைய நாட்டுப்பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளிலே, மிக முக்கியமான, மற்றக் கவிகள் பாடாத, காலத்திற்கேற்ற, பலன் அளித்த பகுதி.
விடுதலைப் போர் புரிய, அவருடைய கவிதைகள், தக்க கருவியாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.

ஆச்சாரியார் சொன்னார், “அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல கவிகள் பாடலகள் இயற்றினர். தமிழர்களுக்கு, தமிழ்க் கவிதைதானே பயன்பட முடியும். பாரதியார் அந்த வகையிலே, தமிழருக்குப் பயனபட்டார்” என்று.

ஆக, பாரதியாரின் பக்திப் பாடல், வேதாந்தப்பாடல் இவைகளைவிட, நாட்டுப்பற்றுப் பாடல் மகதத்தன பலன் தந்தது. விழா கொண்டாடின அன்பர்கள், இந்தப் பகுதியைத் தான் விளக்கினார்கள் விஸ்தாரமாக. மதுரை முஸ்லீம் தோழர் ஒருவர் “பாரதியாரின் பாடல் ஆங்கிலரை ஓட்டிய அணுகுண்டு” என்று கூறினார். தமிழகத்திலே, காங்கிரசின் வெற்றிக்கு பாரதியார் பாடல், மிகமிகத் தாராளமாகப் பயன்பட்டது. பயன்படுத்திக் கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர். பாரதியாரை ஐதோ ஓர் சமயத்திலே மட்டும் எண்ணுவதுடன் இருந்தனர், இக்குறையைப் போக்கி, கவிஞரின் நினைவுக்குறியாக ஓர் ஆழகிய மண்டபத்தை, அமைத்தார் கல்கி.

ஆச்சாரியார் சொன்னாரே, பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று, அதுபோல, பாரதியாரின் தேசீயப் பாடல்களை மட்டுமே, பரப்பிய காரணத்தால், நாட்டவருக்கு, பாரதியாரின் முழு உருவம் தெரியவில்லை இனியாவது தெரியுமா என்றால், தெரியச் செய்தாலொழியத் தெரிவதற்கில்லை என்று கூறலாம்.

முடுவோமே பள்ளுப் பாடுவோமே!
வந்தே மாதரம் ஏன்போம்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
தாயின் மணிக்கொடி பாரீர்,
ஜெய ஜெய பாரத
இப்படிப்பல தேசியப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டு வந்துள்ளனர். பாரதியார், அவ்வளவுதானா? அல்ல! பாரதியாரின் முழு உருவம் அது அல்ல! அடிமை நிலைபோக வேண்டும் என்ற கோபிநலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத்தாண்டி, நாட்டு உள் நிலை, மக்கள் மனநிலை, இவைகளைக் கண்டு, மனம் நொந்து வேதனைப்படும் பாரதி இருக்கிறார், மக்களின் மந்த மதியினைக் கண்டு அவர்களைத் திருத்த வேண்டும் என்று ஆவல் கொண்டுதுடிக்கும் பாரதி இருக்கிறார், நாடு எப்படி எப்படி இருக்க வேண்டும், சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும் என்று இலட்சியம் கூறும் பாரதி இருக்கிறார். தேசிய பாரதியின் உருவம், இத்தனை பாரதிகளை மறைக்கிறது - ஆச்சாரியார், பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல.

பெரிய பந்தல், விழாவுக்காக, மண்டபமோ, கவியின் பெருமைக்குரிய சினனம். விழா முடிந்ததும் பந்தலைப் பிரித்து விடுவார்கள். மண்டபம், நின்று அழகளிக்கும். அதுபோல் பாரதியாரின் தேசிய கவிதை அன்னியரை ஓட்டும் அரும்பணிக்காக மட்டுமே அமைவது - அந்தக் காரியம் முடிந்தால் இனி, அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை, அவசியமில்லாததால், அது ஏடுபடும் அது ஏடுப்பட்ட பிறகுதான், பாரதியாரின் மனம், தெரியும். பாரதியாரின் முழு உருவமும் தெரிய அவருடைய கவிதா சக்தியின் முழுப் பயனைப் பெற, அப்போதுதான் முடியும்.

இனியும், மேடைகளிலே ஏறி தாயின் மணிக்கொடி பாரீர் போன்ற, தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிப பயனில்லை.

தாயின் மணிக்கொடி பார்க்கிறோம், இங்கே காயும் வயற்றையும் காண்பீர் - என்று மக்கள் - முழக்கமிடுவர். எனவே, எந்தப் பகுதியை மட்டுமே, அதிகமாகப் போற்றி நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசியப் பாடல் பகுதிக்குள்ள, பயனும், ஜொலிப்பும் இனி இராது. ஆகவே, பாரதி பயன் இல்லையா? அல்ல, அல்ல! பயனுள்ள பகுதி, பலரறியா பாரதி, மறைக்கப்பட்ட பாரதி, இனித்தான் மக்களுக்குத் தெரியவேண்டும். தேசிய கவிக்கு அப்பால், நிற்கிறார் அந்தப் பாரதி. அந்தப் பாரதி ஆங்கிலேயனை, ஆரிய பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல! நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்டவேண்டுமென்று கூறும் பாரதி. மேடைகளிலே இதுவரை, நிறுத்தப்படாத பாரதி! தேசபக்தர்களின் நாவிலே நின்று இதுவரை நர்த்தனமாடாத பாரதி! மறைந்திருக்கிறார், பொன்னாலான பெட்டிக்குள் முத்துமாலை இருப்பதுபோல, அந்தப் பாரதியை நாம் அறிமுகப்படுத்தினால், விழா கொண்டாடியவர்களிலேயே பலருக்கு, முகமும் அகமும் சுருங்கக்கூடும். ஆனால் அந்த பாரதி நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளி வந்தாலோ, இன்று அவரை வந்திருக்கும் பலரே, நிந்திக்கவும் கூடும். இதோ அந்த பாரதி - பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம்.

பண்டைப் பெருமை - பழங்கால மகிமை - அந்த நாள் சிறப்பு - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களை நாம், எவ்வளவோ, கௌரமாகத்தானே, கேட்கிறோம் ஐயா! பழைய காலத்தைக் கட்டிப்பிடித்தழுகிறீரே, இது சரியா? என்று.

பலருக்குத் தெரியாத, முழுப் பாரதி, அவர்களை, இலேசில் விடவில்லை! மூடரே! என்று அவர்களை விளிக்கிறார், கேட்கிறார் அவர்களை,
முன்பிருந்ததோர் காரணத்தாலே
மூடரே பொய்யை மெய்யென லாமோ?
முன்பெனச் சொலும் காலமதற்கு
மூடரே, ஓர்வரை துறையுண்டோ?
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்
மூன்றுகோடி வருடமு முன்பே
முன்பிருந்த தெண்ணிலாது புவிமேல்
மொய்த்த மக்களெலா முனிவோரோ?
நீர்பிறக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?
பார்பிறந்தது தொட்டின்று மட்டும்ட
பலபலப்பல பற்பல கோடி
கார்பிறக்கு மழைத்துளி போலே
கண்ட மக்களனைவருள்ளேயும்
நீர்பிறப்பதன் முன்பு மடமை
நீசத் தன்மை இருந்தனவன்றோ?
பழமை விரும்பி, என்ன எண்ணுவார், பாரதியாரைப் பற்றி!
சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற ஆசைத்துக கொண்டு
தின்றுவிளை யாடிஇன்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அகன்றுபோம் திரும்பி வாரா.

மற்றுமோர் சாட்டை! வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு, வகையாகத் தருகிறார் சாட்டை! சென்றது இனி மீளாது, மூடரே! மனுதர்மம் இருந்ததே! அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது வலக்கரத்திலே ஆக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும், மற்றவர்களுக்கெல்லாம், பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப்பெறுமோ என்றெல்லாம், எண்ணி எண்ணி எங்காதீர், சென்றது இனி மீளாது, என்று திட்டமாகக் கூறுகிறார், கூறுகிறேன் கேளுங்கள், மூடர்களே! என்று இடித்துரைத்துப் பேசுகிறார். இந்தப் பாரதி, மேடையிலே தோன்றாத பாரதி.
செத்தபிறகு சிவலோகம் வைகுண்டம்
சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பார் பித்தமனிதர்.
சாதிக்கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்.

“அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடு வீரே!
பெரும்புகழ் உமக்கே ஆசைக்கின்றேன்
பிரமதேவன் கலையிங்கு நீரே”
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்
பின்னிந்த ஊகினிலே வாழ்க்கை இல்லை.
தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள, புரட்சிக் கவிஞர் தெரிகிறார், இன்னும் தெளிவாக.

“நெஞ்சு பொறுக்கு திலையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”
என்று சோகிக்கிறார் பாரதி! ஏன் நிலைகெட்டுவிட்டது? தேசியக் கவியாக மட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்ட பாரதநாடு பரதவித்தது என்று மட்டுமே கூறுவார். ஆனால் பலருக்குத் தெரியவிடாதபடி மறைக்கப்பட்டிருக்கும் முழுப்பாரதி பேசுவதைக் கேளுங்கள்.

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்களென்பார் இந்த
மரத்திலென்பார் - அந்தக் குளத்திலென்பார்.
குஞ்சுது முகட்டிலென்பார் மிகத்
துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!
மந்திரவாதி யென்பார் - சொன்ன
மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனையாயிரம் இவர்துயர்கள்
சாடுகிறார், சாடுகிறார், மூட நம்பிக்கைகளை!
கொஞ்சமோ பிரிவினைகள்?
ஒரு கோடி யென்றால் அது பெரிதாமே?
ஐந்து தலைப்பாம்பென்பான் அப்பன்
ஆறுதலையென்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை, மனதிலே உள்ள தளைகளை, மூடக்கொள்கைகளைத் தாக்குகிறார், தமது கவிதா சக்தியைக் கொண்டு.

பாரதியாரா? என்று ஆச்சரியத்துடன் நாடு கேட்கும், அவர் சொன்தத்தனையையும் சொல்லப்போனால் ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடுபட்டு மறைத்திருக்கிறார்கள்.

பார்ப்பானை ஐயனென்ற
காலமும் போச்சே
என்ற ஒருவரியைக்கூட அவர் சொன்னதாகச் சொல்ல, அஞ்ச மறைத்தனர் - அருந்தமிழ் நாட்டவர்தான்! பாரதியார் அந்தச் சமுதாயத்தை மேலும் என்னென்ன கூறினார் என்று தெரிந்தால்தானே, பாரதியாரின் முழு உருவம் தெரியும்.

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்
அவர்எது செய்தும் காசுபெறப் பார்ப்பார்
பிள்ளைக்குப் பூணூலா மென்பான்
நம்மைப் பிச்சுப்பணம் கொடெனத் தின்பான்
பேராசைக் காரனடா பார்ப்பான்
ஆனால் பெரியதுரை என்னில்
உடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை செய்வான்.
பணம் ஆள்ளி இடவில்லை யெனில் வைவான்.

மகாகவி பாரதியின் வாக்கு, பேராசைக்காரனடா பார்ப்பான்! என்பது மேடைகளிலே, கேட்டதுண்டா! பாரதி சிறப்புவிழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தாரா? இல்லை! அவர், மறைந்திருக்கிறார், மண்டபம், பந்தலால் மறைக்கப்பட்டிருப்பதுபோல விழா முடிந்தது பந்தலும் பிரிக்கப்பட்டது! மண்டபம் தெரிகிறது! என்பதுபோல, வெள்ளையர் வெளியேறும் விழா முடிந்தது, இனி, தேசியக் கவிதை அலங்காரத்தைக் கடந்து நிற்கும், பாரதி காண விரும்பிய புது சமுதாயம்.

ஏழை என்றும் அடிமை என்றும்
ஏவனுமில்லை, ஜாதியில் இழிவு கொண்ட
மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே!

என்ற இலட்சியம், உடேறிய நிலை பெற்ற சமுதாயம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமில்லாத சமுதாயம் பழைமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிலுள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி நிற்கிறார். ஆனால் அவரைப் பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது! அவரை, நாட்டுக்குத் தெரியவிடாதபடி செய்வதில் பலருக்கு இலாபம் இருக்கிறது. எனவே, தேசியக் கவி மட்டுமே தெரியவேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வர். ஆனால் அந்த எண்ணமும் உடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஓட்டாது அவர்கள் மறைத்துவைத்துள்ள பாரதியார், உண்மையில் மறைந்து விடவில்லை. ஆதோ பாடுகிறார் கேளுங்கள்.

இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென் பானும்...

அது பாரதிதாசன் குரல் அல்லவா? என்கிறீர்களா? ஆம்! பாரதிதாசன்தான்! அவர்தான், மணிமண்டபத்தைவிட விளக்கமாக, முழு பாரதியை தமிழகத்துக்குத் தரும் அரும் பணியாற்றுகிறார். ஆவரிடம் நாங்கள, முழுப்பாரதியாரைக் காண்கிறோம், களிக்கிறோம் - வாழ்த்துகிறோம்.

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
உடலினை உறுதி செய்
எண்ணுவதுயர்வு
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்
ஓளடதங் குறை
கற்ற தொழுகு
காலமழியேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் ùய்க
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
சரித்திரத் தேர்ச்சிகொள்
சாவதற்கஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சூரரைப் போற்று
சோதிடந்தனையிகழ்
தெய்வம் நீ என்றுணர்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கஞ்சேல்
நினைப்பது முடியும்
நூலினைப் பகுத்தணர்
நெற்றி சுருக்கிடேல்
பிணத்தினைப் போற்றேல்
புதியன விரும்பு
பேய்களுக்கஞ்சேல்
போர்த்தொழில் பழகு
முனையிலே முகத்துநில்
மேழி போற்று
யாரையும் மதித்துவாழ்

இவை பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி! புதிய பாதை! பாரதி பாதை தேசியமணி மண்டபத்தோடு முடிந்து விடுவதல்ல. அதற்கு அப்பாலுள்ள சமதர்மபுரிக்குப் போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் அரும்பணியாற்றும் நாம் பாரதியார் பெற்ற சிறப்புக்கண்டு பெருமையடைவதுடன் பாரதியாரின் முழு உருவமும், மக்களுக்குத் தெரியச் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டுள்ளோம். பாரதி காட்டிய பாதையை நாடு நன்கு அறியவேண்டும்! பரங்கியை ஓட்டிவிடுவது மட்டுமல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ளதனைத்தையும் ஓட்டி, புதிய சமூக அமைப்பாக்கும் பாதை. அந்தப் பாரதி பாதையை, நாம் போற்றுகிறோம்.

(திராவிட நாடு - 19-10-47)