மக்களால்
வெறுத்து வீசப்பட்ட மத்திய சர்க்கார் அமைச்சர் சந்தானத்தை,
விந்நியப் பிரதேச கவர்னராக ஆக்கிய பற்றி கண்டித்தோமல்லவா?
இதே கண்டனத்தை எழுப்பியிருக்கிறார்கள், புது டில்லியில்.
இந்தியப் பிரதமரை, பத்திரிகை
நிருபர்கள், கேட்டிருக்கிறார்கள், ‘தோற்கடிக்கப்பட்டவர்கள்,
கவர்னராகலாமா? என்று அதற்குப் பண்டிதர் பதிலளித்திருக்கிறார்
– ஜனநாயக உலகைக் கேலி செய்வது போல்!
‘மந்திரியாக இருந்தாலென்ன,
மதியூகியாக இருந்தாலென்ன, மக்களை மதியா உன்னை நாங்களும்
மதியோம்“ என்று, மாயூரம் தொகுதி லட்சக்கணக்கான மக்கள்,
முடிவு கூறினார்கள் – தேர்தலின்போது.
அந்த முடிவை, அவமதிக்கிறார்
நேரு! முடிவு தந்த லட்சக்கணக்கான வோட்டர்கள் – யாரோ சிலராம்
– செப்புகிறார். ஆசிய ஜோதி. “சென்னையிலுள்ள சில வாக்காளர்களால்
அவர் தேரந்தெடுக்கப்பட்வில்லையென்பதற்காக, அவருடைய சேவையையா
– இழப்பது,“ – என்று கூறியிருக்கிறார். ரயில்வே இலாகாவில்
அருமையாக வேலை செய்தாராம், சந்தானம் – கூறுகிறார் நேரு.
என்ன அருமையோ அது – நமக்கெல்லாம் தெரியாதது – நாட்டின்
பிரதமருக்குத் தெரிகிறது! ரயில்வே இலாகா முழுமையைம் ‘நாமதாரி‘களாக
ஆக்கிய தவிர, எந்த ‘அருமை‘யையும் காணவில்லை நாம் – ஆனால்,
முடிசூடா மாணிக்கம் கூறுகிறார்!
சந்தானத்தைப் பாராட்டிவிட்டுப்
போகட்டும் – ஆட்சேபமில்லை நமக்கு. ஆனால் அவரைத் தேர்ந்தெடுக்காமல்
விரட்டிய மக்களை அவமதிக்கிறார் – ஜனநாயத் தேர்தலை, அலட்சியமாகக்
கருதுகிறார். நண்பருக்காக, நாவு, இவ்வளவு வேகமாக அசைவதா
ஒரு பிரதமருக்கு? சிலராம் சிலர்! “Some electros in Madras”
நேரு, கூறுகிறார் இப்படி! சந்தானத்தை வெறுத்து வீசிய மக்கள்
தீர்ப்பைவிட, தனது தீர்ப்பே மேலென்கிறார் – ஜனநாயகம் பற்றிப்
பேசும் காந்தீய வாரிசு கூறுகிறது. இவ்விதம்! தலைமைப்பதவி,
இத்தகைய நெஞ்சுரத்தைத் தராது – இவருக்கு என எண்ணினோம்
– ஆனால் சராசரி நிலையையும் தாண்டிவிட்டார்! “வேண்டியோருக்கு
ஏற்படும் இழிவு“ காண, ஏனோதானோக்கள், குதிக்கலாம் – குளறலாம்
– கொந்தளிப்போடு பேசலாம். ஆனால் இவரா பேசுவது? நேருவா!
- ஜனநாயகம் பேசும் நேருவா!
திராவிட
நாடு – 9-3-52