அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"மிருக ஆட்சி''
1

தேர்தலும் காங்கிரசும் -
"விடுதலை''யும் காமராசரும்
- காங்கிரசாட்சியின் கொடுமை.


தம்பி!
போஸ்டர் வேண்டுமா, போஸ்டர்! கண்ணைக் கவரும், கருத்தைக் கிளறும்! காங்கிரஸ் ஒழிப்பிலே கவலைகொண்ட பெரியவர்களே! இளைஞர்களே! போஸ்டர் தயாரித்திருக் கிறோம். "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என்று அழகாக அச்சடிக்கப்பட்ட போஸ்டர் - இலட்சக் கணக்கிலே உள்ளன - அடக்க விலை - ஆதாயம் கருதிப் போடப்பட்டதல்ல - வியாபார நோக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல - நாட்டைக் கேடர்களிடமிருந்து மீட்டிட நல்லறிவுப் பிரசாரம் நடாத்துவதற்காகவே, பொருள் நட்டம், நேரக்கேடு, எதனையும் பொருட்படுத்தாது, இதனை வெளியிடுகிறோம்.

ஆயிரக் கணக்கிலே வாங்குங்கள் - விலை மலிவு - பல்லாயிரக் கணக்கிலே வாங்குங்கள் - பட்டி தொட்டி களிலுள்ளோரும் வாங்குங்கள் - வீடுதோறும் ஒட்டிவையுங்கள் - ஓட்டு கேட்க வரும் காங்கிரசாரை ஓட்டுங்கள்.

காங்கிரசார் கண்களிலே, எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்தப் போஸ்டர்கள் படவேண்டும் - நாடே நமக்கு விரோதமாக இருக்கிறது - ஊரார் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் நம்மை விரட்ட என்று கிலிகொண்டு, அவர்கள் பிடரியில் கால்பட எடுக்க வேண்டும் ஓட்டம் - அதற்கு உதவக்கூடிய போஸ்டர், வாங்குங்கள் ஒட்டுங்கள்!

ஆயிரம் ஐந்தே ரூபாய்! கருப்பு மையில் அச்சிடப்பட்டது, கண்கவரும் வனப்புள்ளது.

நாலரை அல்லது ஐந்து அங்குல அகலம் இருக்கும் பதினெட்டு அங்குல நீளம்!

புரட்சிகரமான தோற்றம் தேடுவோர், சிகப்பு மையில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை வாங்கலாம் - விலை சிறிதளவுதான் கூடுதல் - ஆயிரம் 7-ரூபாய்தான்!

காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் - என்ற இந்த அறிவுரைத் தாட்களை அனைவரும் ஆயிரக் கணக்கிலே வாங்கி, ஊரெங்கும் ஒட்டி, திராவிட நாட்டுக்கு ஆபத்து வராதிருக்க நம்மாலான நல்ல தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுங்கள். இந்தச் சிறு காரியத்தைக்கூடச் செய்யத் தவறுபவர்களை, நாம் எப்படித் திராவிட மக்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இழி ஜாதி மக்கள், ஈனப் பிறவிகள், காலித்தனத்தால் கூலித்தனத்தால் வயிறு கழுவும் வக்கற்ற மக்கள், என்று உலகு நாளைக்குக் கூறும். எனவே போஸ்டர் வாங்குங்கள், பொன்னான வாய்ப்பு, புனிதமான கடமை, பொறுப்பு உணர்ந்தோர் செய்து தீரவேண்டிய தொண்டு - காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் - என்ற போஸ்டர்களை வாங்கி எங்கும் ஒட்டி வைப்பதுதான்.

என்ன அண்ணா! இது! காங்கிரஸ் ஒழிப்புக்கான போஸ்டர் வெளியிடுகிறோம், விலை கொடுத்து வாங்கி ஊரெல் லாம் ஒட்டு என்றால் ஒட்டுகிறோம் - அதற்காக, வாங்காதவர்கள், ஈனப் பிறவிகள் - இழி ஜென்மங்கள் என்றெல்லாம் சுடுமொழி கூறுகிறாயே, இதென்ன; என்றைக்குமில்லாத முறையில் இருக்கிறதே என்று சிறிதளவு கோபத்துடன் கேட்க எண்ணுகிறாய் அல்லவா? தம்பி! சுடுசொல் கூறுபவனா நான் - உன்னையா நான் சுடுமொழியால் தாக்குவேன்? என் மொழியும் அவ்விதம் இராது - என் வழியும் அது அல்லவே! விஷயத்தைச் சொன்ன பிறகல்லவா உனக்கு உண்மை துலங்கும், கேள்.

சென்ற பொதுத்தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி எப்படியும் ஒழிக்கப்பட்டாகவேண்டும்; அதிலே ஒரு சில கண்ணியவான்கள், ஓமந்தூரார் போன்ற உத்தமர்கள் இருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை, அந்த ஸ்தாபனம்' ஒழிக்கப்பட்டாக வேண்டியது மிக மிக அவசரமான கடமை,
அதிலிருந்தும், அணுவளவும் பிசகுவது கூடாது, அச்சம், தயை தாட்சணியம் - முன்பின் தொடர்பு எதுவும் குறுக்கிடக் கூடாது என்று வீரவேசமாகத் திராவிடர் கழகம் சீறிப் போரிட்டபோது, விடுதலைக் காரியாலயம், காங்கிரசை ஒழித்துக் கட்டுங்கள் - காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவு விளக்கம் தர, அவர்களை ஆண்மையாளர்களாக்க, கருப்பிலும் சிகப்பிலும் போஸ்டர்கள் பல இலட்சம் வெளியிட்டு, விற்பனை செய்தார்கள் - அதை நினைவூட்டுகிறேன் - உனக்கு மட்டுமல்ல - அவர்களுக்கோ என்று கேட்டு விடாதே, அவர்களுக்கு நான்தரும் கரும்பும் கசக்கும் - நாட்டவருக்கு நினைவூட்டுகிறேன். அன்று காங்கிரஸ், எந்த அளவுக்கு, வெறுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்படவேண்டிய, கேடான "ஸ்தாபனமாக' இருந்ததோ, அதிலே ஏதேனும் ஒரு துளி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? நாமெல்லாம் வாழ்த்தி வரவேற்கத்தக்க, அல்லது சகித்துக்கொள்ளத்தக்க விதமான அமைப்பாக, காங்கிரஸ் மாறிவிட்டதா? பார்ப்போம் - இந்த ஒரு தடவை இருந்து தொலைக்கட்டும் - என்று கூறத்தக்க, மனநிலையை நாம் பெறுவதற்கான திட்டங்களை, காங்கிரஸ் நாட்டுக்கு அளித்திருக்கிறதா? என்பன போன்ற எண்ணங்கள் என் மனதைக் குடைகின்றன, மனமென்ற ஒன்று இருந்து தொலைப்பதால்!

சென்ற பொதுத் தேர்தலின் போது இருந்ததைவிட, எல்லாத்துறைகளிலும், காங்கிரஸ், கேடு தருவதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிறையிலே தள்ளிச் சித்திரவதை செய்வதிலும், தெருவில் செல்வோரைத் துரத்தித் துரத்தி அடிப்பதிலும், மிரண்டு ஓடுவோரைச் சுட்டுக் கொல்வதிலும், காங்கிரஸ் பயங்கரமான பயிற்சி பெற்றுவிட்டிருப்பது காண்கிறோம்.

இன்று எந்த இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம், ஊரடங்கு சட்டம், எந்த இடத்தில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற பயத்துடன் தான், நாளிதழ்களைப் பிரித்துப் படிக்க வேண்டி இருக்கிறது.

சென்ற பொதுத் தேர்தலின் போது, காங்கிரசாட்சியினால் விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைக் கூறினோம் - இந்தத் தடவை கூறும்போது, முன்பு எவ்வளவோ மேல் என்று சொல்லத்தக்க விதமாகத்தான் இப்போதைய ஆட்சி அலங்கோலம் இருக்கிறது.

மக்களின் "வாழ்வு' முன்பு இருந்ததைவிட, இப்போது மோசமாகி இருக்கிறது.

தொழில் வளம் - தென்னாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஐந்தாண்டுகளில் எந்த விதத்திலும் வளர்ச்சி அடைய வில்லை.

இதனைச் சிற்சில சமயங்களில் காங்கிரஸ் அமைச்சர்களே கூறி அழுகிறார்கள்.

இவை எதனையும் மறுத்திடவுமில்லை. ஆனாலும், காமராஜர் நல்லவர், அவர் மறுபடியும் ஆட்சிபுரிய வேண்டும் ஆகவே அவருடைய வெற்றிக்காகத்தான் வேலை செய்யப் போகிறோம். அவர் வெற்றிபெறுவது, தமிழர்களுக்கு ஒரு "வரப் பிரசாதம்' என்று எண்ணுகிறோம் என்பதாகக் கூறுகிறார்களே, இவர்களேதான் ஆயிரம் ஐந்து ரூபாய் என்று போஸ்டர் போட்டு நாட்டவருக்குக் கொடுத்தார்கள்.

இப்போது ஒரு சமயம், காங்கிரசை மறவாதீர்கள்! ஓட்டுகளைக் குவியுங்கள்! என்று போஸ்டர் போடவேண்டிய நிலைமை வருகிறதோ, அல்லது.

நாடு வாழ மாடு வேண்டும்
மக்கள் ஓட்டு மாட்டுப் பெட்டிக்கே!
காளைமாட்டுப் பெட்டி
காமராஜர் வைக்கும் பெட்டி

என்று விதவிதமான போஸ்டர்கள், பச்சை, நீலம், ஊதா கலர்களில் வெளியிட்டு விற்பனைக்குத் தரப்படுமோ என்னமோ, யார் கண்டார்கள்!

இல்லை, அண்ணா! அப்படி எல்லாம் போடமாட்டார் கள், கூச்சமாக இருக்குமல்லவா, வேண்டுமானால், நம்மீது உள்ள வெறுப்பைக் காட்டுகிற முறையில்.

கண்ணிர்த் துளிக்கு வேட்டு
காமராஜருக்கே ஓட்டு

என்று வெளியிடக்கூடும் - அல்லது இன்னமும் இழிமொழி அழகுடன் வெளியிடக்கூடும் என்று கூறுவாய்; எவ்விதமான முறையைக் கையாண்டாலும், தம்பி நாடும் நாமும், காங்கிரஸ் குறித்து, பெரியார் கொண்டுள்ள கருத்து என்ன என்பதை எப்படி மறந்து விடமுடியும்.

அவர் என்ன, பட்டும்படாதது மாகவா, கூறியிருக்கிறார்.

பொறி பறக்கப் பறக்கப் பேசி இருக்கிறார் - பசுமரத்தாணி போலல்லவா பதிந்திருக்கிறது.

நான் கூடச் சில வேளைகளில், ஏன் வீணான தொல்லை, சஞ்சலம், சங்கடம், சிக்கல் - காங்கிரசே வந்து தொலைந்து போகட்டுமே, நமக்கென்னவென்று இருந்துவிடுவோமே, நாம் எதற்கு வம்புதனை விலைகொடுத்து வாங்குவதுபோல, தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று இடர்ப்படவேண்டும், என்று சலிப்புடன் எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால் அடுத்த கணமே அவருடைய உருவம் தோன்றும் மனக்கண்முன்பு, "அடே அறிவிலி! எவ்வளவு இடித்திடித்துக் கூறினேன் - எத்துணை அருமையான காரணம் காட்டினேன், காங்கிரஸ், ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று; இவ்வளவும் கேட்டுவிட்டு, இனியும் இளித்தவாயனாவதா? காங்கிரசை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எவ்வளவு தந்தேன் - எங்கே போயிற்று அந்த ஆற்றல்! விழலுக்கு இறைத்த நீராயிற்றா என் அறிவுரை விளக்கம்!'' என்று கேட்டுக் கேலிசெய்கிறதே, என் செய்வேன்? இதோ கேளேன், தம்பி, ஒரு விளக்கம் - அவர் அருளியது:

"காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்தில் பட்டினி என்று பரிதவிக்கும் பாமர மக்களைப் பார்க்கவே முடியாதே! கஞ்சியின்றிப் பிச்சை எடுத்துத் திரியும் தொழிலாள நெசவாளி மக்களைக் காணமுடியாதே!''

என்னென்ன இன்ப அலைகள் நெஞ்சில் கிளம்புகிறது, இந்த அரசியல் விளக்கம் கேட்கும்போது.

பாமரன் பட்டினி கிடக்கமாட்டான். பாட்டாளிக்குத் துன்பம் இல்லை!

இதைவிட "வெற்றி' வேறு என்ன காணமுடியும்?

இந்த இன்ப நாள் காணக் காங்கிரஸ் ஒழியவேண்டும், என்கிறார் - காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்திலே, இந்த இன்பநிலை ஏற்படும் என்று கூறுகிறார்.

இதை எண்ணத்தில் பதிய வைத்துக்கொண்டானபிறகு, காங்கிரசை எதிர்க்காமலிருக்க முடிகிறதோ!! உன்னாலும் என்னாலும் முடியவில்லை!! காமராஜர் நல்லவர், ஆகவே, இப்போதைக்கு, காங்கிரஸ் ஒழிப்பு வேலையை நிறுத்திவைக்க லாம் என்று வாதிட முடிகிறது அவர்களால், நமக்கோ அந்த வாதம், மயக்கமளிக்கிறது.

காரணம் காட்டும்போது, கசடனே! நீ, பழங்காலப் பேச்சையே, புட்டுப்புட்டுக் காட்டிக்கொண்டு கிடக்கிறாயே, சரியாகுமா? நல்லவர் நம்மவர் என்று பெரியாரால் பரிவுடன் அழைக்கப்படும் பேறு பெற்றவர், காமராஜர், ஆட்சி புரியக் கண்டு உளம்மகிழ்ந்தோம், அவருடைய ஆட்சித் திறமையால் ஏற்பட்ட நன்மைகள் பலப்பல, மறுபடியும் அவர் ஆட்சி ஏற்படின் இன்னும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்திடும் - எனவே தான், இப்போது "புதிய போர்முறை' வகுத்திருக்கிறோம் - நீ சுத்தக் "கர்நாடகமாக' இருக்கிறாயே, எப்போதோ அவர் சொன்ன அந்தப் பழைய விஷயத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறாயே, இப்போது புதிய நிலைமை, புதிய காரணம், எனவே புதிய முறை, இதனைப் புரிந்துகொள் என்று சிலர் கூறிடக் கேட்டிருப்பாய்.

காரணம் என்ன கூறப்பட்டாலும், கடமையிலிருந்து துளியும் தவறாதே! துரோகம் இழைக்காதே! என்று பெரியார் எச்சரித்திருக்கிறார் -மிகுந்த கோபத்துடன், சாபமிடுவதுபோலப் பேசியிருக்கிறார் - அது என் நினைவிலே நின்று, வாட்டுகிறது, வதைக்கிறது, தவறி நடக்காதே என்று எச்சரிக்கை செய்கிறதே, நான் என்ன செய்யமுடியும்.

நாட்டுக்குத் துரோகம் திராவிட மக்களுக்கு துரோகம்.

தகப்பன், தாய், பெண்டு பிள்ளைக்குச் செய்யும் தீங்கு.

எது? காங்கிரசுக்கு யாராவது ஒரு ஓட்டு போடுவார்களானாலும் கூட, இத்தனை "பாபமும்' பற்றிக்கொள்ளும் என்று பெரியார் கூறியிருக்கிறார்.

காரணம் கூறினால் போதாது என்கிறார்.

ஒரு ஓட்டுப்போட்டாலும் கெட்டுவிடும் காரியம் - துரோகப் பட்டியலில் உன் பெயர் இடம்பெற்றுவிடும் என்கிறார்.

அவர் கூறும் அறிவுரை முழுவதையும், கேள், தம்பி, கேள்.

"ஒவ்வொருவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரஸ் பெட்டியில் ஓட்டுப் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இதை மறந்து யாராவது ஒரு ஓட்டுக்கூட போடுவார்களானால் அது இந்த நாட்டுக்குச் செய்த துரோகம் மாத்திரமல்ல, திராவிட மக்களுக்குச் செய்கிற துரோகம் மாத்திரமல்ல, ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தன் தகப்பன் தாய், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு''.

இவ்வளவு கடுமையாக அவர் எச்சரித்திருக்கும்போது, காமராஜர் நல்லவர் என்று ஒரு காரணம் காட்டி, காங்கிரசை எதிர்க்காமலிருக்கவேண்டும் என்று எப்படித் தம்பி, நான் உனக்குக் கூறமுடியும் - நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?

நாட்டு மக்களிலே, பொதுநல நோக்கமற்றோர் சிலர், காங்கிரசைச் சுயநலம் கருதி ஆதரித்து மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படவழி செய்து விடுவார்களோ என்ற கவலை கலக்கும் நிலையில், பெரியார், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நாட்டுக்கு எத்துணை பெரிய நாசம் என்பதை எடுத்துரைத் திருக்கிறார் - தம்பி - கேட்டால் நடுக்கம் பிறக்கும் உனக்கு - காங்கிரசாட்சியை எதிர்த்திட கல்லுருவும் உயிர்பெற்று எழத் துணியும் என்று கூட, கற்பனை அலங்காரத்துடன் பேசுவாய்.

"நம்மைப் பொறுத்தமட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கத்திற்கு வருவதைவிட, உலகப் போர் வந்து, இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் அணுகுண்டுக்கு இரையாகி மடிவதே சிறந்த முடிவு என்போம். சித்திரவதைக் காட்டிலும், திடீர் மரணம் மேலான தல்லவா?''

சித்திரவதை! காங்கிரசாட்சி மீண்டும் ஏற்படுவது, மரணத்தினும் கொடியது என்றாலும், அவர் எம்மிடம் சிரித்துப் பேசுகிறார், ஆகவே, இந்தத் தடவை சித்திரவதையைச் சகித்துக் கொள்ளும்படி செந்தமிழ் நாட்டவருக்குக் கூறுவோம் வாரீர் என்று நாட்டு மக்களை அழைத்திட என்னால் எப்படித் தம்பி முடியும்! அவர்கள் அழைக்கிறார்கள்!

நான், முன்பு பெரியார் காங்கிரஸ் குறித்துச் சொன்னதை மறவாமலிருக்கிறேன் - மாற மறுக்கிறேன்.

காங்கிரஸ்காரர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்; அவர்களுக்கு நிர்வாகத் திறமையில்லை.

காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காந்தியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கதர் வேஷம் போட்டுக் கொண்டு ஏமாற்றுகிறவர்கள், ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு-மக்கள் அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு பதவி வேட்டை ஆடுகிறவர்கள், மக்களுடைய கருத்தை அலட்சியம் பண்ணிவிட்டுத் தங்களுடைய விருப்பப்படி அதிகாரம் செலுத்த ஆசைப்படும் எதேச்சாதிகார வெறியர்கள்''

அந்த வெறியர்களிலே வேண்டியவர்கள் - வேண்டாதவர் கள் என்று பாகுபாடு என்ன தேவைப்படுகிறது. பெரியாரின் "பாஷை'யில் கேட்கிறேன், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

காமராஜர் நல்லவர். என்கிறார்கள் - எனக்குப் பெரியார் பேசும் அந்தப் பழமொழி நினைவிற்கு வருகிறது.

நேருவுக்கு வலது கரம், பார்ப்பனப் பாதுகாவலர், முதலாளிக்கு இரும்புத்தூண், அடிதடியாட்சிக் கர்த்தா, கொலைபாதக ஆட்சிக்கு உடந்தையானவர்.

இவை, காமராஜருக்கு விடுதலை சூட்டிய பட்டங்கள்.

முன்பு தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராஜர் வெற்றி பெற்றார் - அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்டபாடு வீணானது கண்டு, மனம் வெதும்பி "எப்படிப்பட்ட "ஆசாமி' வெற்றி பெற்று விட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போக வேண்டும்'' என்று கொதித்தெழுந்து கேட்டு, விடுதலை தீட்டிற்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை - அடிதடியாட்சிக்குக் காரண மாயிருந்த தலைவரை - எதிர்க்கட்சிக் காரர்களைச் சுட்டுக் கொன்ற கொலைபாதக ஆட்சிக்குக் காரணமாயிருந்த கட்சித் தலைவரை தோற்கடித்து உலகப்புகழ்பெற வேண்டுமென்று கருதியிருந்த தமிழர்கள் ஏமாந்து விட்டனர்.

இராவணீயம் தோற்றுவிட்டது; விபீஷணத்தும் வெற்றி பெற்றுவிட்டது.''

தம்பி! இப்போது இந்த விபீஷணத்துவ வெற்றியிலே தான் தமிழரின் நல்வாழ்வே இருக்கிறது என்று எடுத்துக் கூறுகிறார்கள் - நியாயந்தானா?

விபீஷணன், இராவணனாகி விடவுமில்லை; விபீஷணன் இராவணன் ஆகியோர் பற்றி கொண்டுள்ள கருத்தும் மாற்றிக் கொள்ளப்படவில்லை; ஆனால் திருவில்லிபுத்தூரில் வெற்றி பெற்ற காமராஜர், விபீஷணர்; இன்று அவர் தமிழர் தலைவர் ஏன்? ஏன்?

திருவில்லிபுத்தூரில் வெற்றி பெறுவதற்காகக் காமராஜர் ஊரூர் சுற்றி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது. அவர் எப்படிப்பட்டவர் என்பதுபற்றி விடுதலையில் "விமர்சனம்' வெளிவந்தது. அதையும் கொஞ்சம் பார் - அவர்களிலே பொறுமைசாலிகள் கிடைத்தால் பார்க்கச் சொல்லு;