தம்பி!
ஒரு புறத்தில், "திறந்த
சிறை'த் திட்டம் அமுலாக்கப்பட்டு நல்ல வெற்றி கொடுத்துக்கொண்டு
வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதேபோது வேறோர் புறத்திலே,
தங்கள் மனதுக்குச் சரியென்று பட்ட கொள்கைக்காகக் கிளர்ச்சியில்
ஈடுபடும் பொதுவாழ்க்கைத் துறையினருக்கு, போலீஸ் கொட்டடியிலும்,
சிறைக்கூடத்திலும் பழைய முறையிலே நடத்தப்படும் போக்கு
இருந்து வருகிறது.
போலீஸ் என்றால் கண்டிப்பு
என்றுதான் பொருள். சட்டத்தைக் காத்திட அவர்கள் எடுத்துக்கொள்ளும்
நடவடிக்கைகள்பற்றி நாம் வருத்தப்பட்டுக்கொள்வதோ கோபித்துக்கொள்வதோ
கூடாது, முறையாகாது என்று ஒரு முறை, இன்றைய முதலமைச்சர்
பக்தவத்சலனார், சட்டசபையிலே பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
தம்முடைய அனுபவத்தையே கூடச் சொன்னார் : "ஒரு முறை சத்தியாக்கிரகக்
கிளர்ச்சியில் ஈடுபட்டபோது என்னை ஒரு போலீஸ் அதிகாரி அடித்தார்;
தடியால் அடித்தார்; கையிலே அடித்தார்; கையிலே அடிபட்டது;
வலிதான், பொறுத்துக்கொண்டேன்; அடித்தவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை.
நான் மந்திரியான பிறகுகூட, அவரைப் பார்த்தேன்; கோபித்துக்கொள்ளவில்லை''
என்று பேசினார். நான்கூட போலீஸ் அதிகாரிகளிடம் கோபம் கொள்ளவில்லை
கோபம் கொள்ளச் சொல்லவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், வெள்ளைக்கார
ஆட்சியின்போது இருந்து வந்த "தர்பார்' முறைகளை மாற்றக்கூடாதா?
மாற்றவேண்டிய பொறுப்பு பக்தவத்சலனார்களுக்கு இல்லையா என்பதுதான்.
அதே முறை! அதே அமுல்! அதே தர்பார்; - என்றால், இவர்கள்
ஆட்சிக்கு வந்ததால், ஆள் மாறிற்றே தவிர முறை மாறவில்லை
என்றுதானே ஏற்படுகிறது. இது புகழ்தரும் நிலையா? என்றுதான்
கேட்கிறேன்.
லாக்-அப்பில் என்னைத் தள்ளிவிட்ட
பிறகு, போலீஸ் அதிகாரிகளும் இதுபோல எண்ணாதிருக்க முடியுமா;
தம்பி! நீயும் நானும், நமக்குத் தோன்றுவதை வெளியே கூறுகிறோம்;
அவர்களுக்கு அந்த உரிமையும் இல்லையே! இங்குதான் இதழில்
படித்தேன், ஒரு போலீஸ்காரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின்
முன்னணியினர் ஒருவருடைய தாயார் இறந்துபோனதற்கு அனுதாபக்
கடிதம் எழுதியதற்காக, வேலைக்கே ஆபத்து வந்தது பற்றியும்,
சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று அந்தத் தோழர் முறையிட்டு
நீதிபெற்றதையும்பற்றிய தகவலை! இந்த நிலையில் நாட்டு ஆட்சி
இருக்கும்போது, நெஞ்சில் எழுவது நாவுக்கு வருமா! சில கடமைகளைத்தான்
அவர்களால் செய்ய முடிகிறது. அந்தக் கடமை உணர்ச்சியுடன்,
மாலையில் எனக்குச் சிற்றுண்டியும் காப்பியும் தருவித்தார்கள்,
நான் அதற்குள் அதிகாரிகள் உட்காரும் பெஞ்சு நாற்காலி ஆகியவற்றிலே
அமரும் நிலையிலிருந்து லாக்-அப் ஆகும் நிலைக்குச் சென்றுவிட்டவன்!
ஆகவே, சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு கொட்டடிக்குச் சென்றேன்.
"உட்கார்ந்துதான் சாப்பிடுங்களேன்!'' என்று ஒரு குரல்
கேட்டது. அதிகாரிதான்! அந்த ஒரு வாக்கியத்தில், மனித உள்ளம்
சில நிலைமைகள் காரணமாக அடையும் வேதனை முழுவதும் தோய்ந்து
இருந்தது.
இரவு மறுபடியும் லாக்-அப்!
நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தில் ஒன்றைக் கேட்டு
வாங்கி, கம்பிகளின் இடுக்கு வழியாக வந்த ஒளியின் துணைகொண்டு
படித்துக் கொண்டிருந்தேன். இடம், போலீஸ் கொட்டடி! நிலை,
லாக்-அப்! படித்த புத்தகமோ கிரேக்க நாட்டில் வாழ்ந்து
வந்த கீர்த்திமிக்கவர்களைப்பற்றி புளூடார்ச்சி என்பார்
எழுதிய, சுவையும் எழுச்சியும் தரவல்ல ஏடு.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்,
கொட்டடிக்கு வெளியே காவல்?
பனிரெண்டு மணிக்குமேல் தூங்கிவிட்டேன்
- பிறகு, மேலே பன்னீர் தெளிப்பதுபோல, தூற்றல் விழவே, விடிவதற்குள்
விழித்துக்கொண்டேன். நான் படுத்திருந்த இடத்தைச் சுற்றி
மழைத் தண்ணீர் சிதறிக் கிடந்தது. கொட்டடி அவ்வளவு ஒழுக்கல்.
போலீஸ் அதிகாரிகள் தயாராக நிற்கக் கண்டேன். வெளியே கொண்டுவரப்பட்டேன்;
காப்பி தரப்பட்டது; துணைக் கமிஷனர் வந்திருந்தார்; என்னை
அழைத்துக்கொண்டு கிளம்பினார், கமிஷனர் அலுவலகத்துக்கு.
17-ம் தேதி காலை, திருவல்லிக்கேணி கடற்கரை பக்கமாகச் சென்றேன்
என்றேனே, இந்தப் பயணம்தான்!
புறப்படுவதற்கு முன்பு,
துணைக் கமிஷனர், பத்திரிகையில் வெளிவந்த கழக அறிக்கைப்பற்றி
என்னிடம் கூறினார்; பேப்பரில் பார்த்திருப்பீர்களே! -
என்றார். இல்லை - பேப்பர் பார்க்க வில்லை என்று நான் கூறவில்லை.
அவரே, அதை யூகித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து,
"ஏன் அவருக்கு, பேப்பர் தரவில்லையா?'' என்று கேட்டார்.
இல்லை! என்றார்கள் அவர்கள். விதி இல்லையே - என்று கூறுவதாகவே
அவர்களின் பேச்சு உணர்த்திற்று. அதைக் கேட்டு, துணைக்
கமிஷனர், "செச்சே! என்னப்பா! இப்படியெல்லாமா நடந்துகொள்வது?
பேப்பர் கொடுத்தால் என்ன? இவர் என்ன, கொள்ளை வழக்கில்
ஈடுபட்டவரா! வம்புவல்லடியில் சிக்கினவரா!'' என்றெல்லாம்
பேசினாரா, என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அப்படி ஒன்றும்
அவர் கேட்கவில்லை. மேலதிகாரி கேள்வி கேட்டார்; உட்பட்ட
அதிகாரிகள் பதில் அளித்தார்கள். ஒழுங்காக நடந்து கொண்டார்கள்
என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது.
பேப்பர் கொடுக்கவில்லையா?
என்று கேட்டாரே மேலதிகாரி, அந்த அரை விநாடி இதயம் பேசுகிறது;
பிறகு, அதிகாரி ஆகிவிட்டார்.
வழியிலேதான் சொன்னார்;
"உங்கள் சம்பந்தியை விடுதலை செய்துவிட்டோம்'' என்று.
கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறவேண்டிய
சட்டச் சடங்குகள் முடிந்து, என்னைச் சைதாப்பேட்டை சப்ஜெயிலில்
கொண்டு போய்ச் சேர்த்தார்.
அங்க அடையாளங்கள், உடைமை
இவைபற்றிய குறிப்புகள் எழுதிக்கொள்ளப்பட்டன; மூக்கின்மீது
ஒரு மச்சம், இடதுகை தோள்பட்டைச் சமீபம் ஒரு மச்சம். வயது-55,
உயரம் பற்றி விவாதம் வந்தது. சுவரிலேயே குறிபோட்டிருந்தார்கள்
- 5.3! என்று கணக்கு காட்டிற்று. இவ்வளவும் பொதுவாழ்க்கைத்
துறையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தேவைதானா?
அடையாறு போலீஸ் கொட்டடிக்கும்,
சைதைச் சிறைக்கும், என்வரையில் உடனடியாகக் கிடைத்த "முன்னேற்றம்'
- இரண்டு கம்பளிகள் சைதையில் தரப்பட்டன. ஒன்று விரிப்பு,
மற்றொன்று போர்வை அல்லது தலைக்கு! இதிலே என்ன சுகம் கண்டாய்
அண்ணா என்று கேட்கத் தோன்றும்! அந்தச் சுகம், ஒரு இரவு
போலீஸ் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தவர் களுக்கு மட்டுந்தான்
புரியும், தம்பி! வெறும் வார்த்தைகளால் விளக்க இயலாது.
1938லில் இந்தி எதிர்ப்பின்போதும்
இப்படித்தான் நமது தோழர்களை எல்லாம் சென்னைச் சிறையில்
போட்டுவிட்டு, என்னை மட்டும் இதே சைதைச் சிறையில் கொண்டுவந்து
வைத்திருந்தார்கள், இப்போது நினைத்துக்கொண்டாலும் எனக்குச்
சிரிப்பு வருகிறது - தொத்தா என்னை அங்கு வந்து பார்த்ததும்,
அங்கு ஜெயிலராக இருந்த முஸ்லீமிடம், என் உடல்நிலைபற்றிச்
சொல்லி, குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கச் சொன்னதும்,
அந்த "அனுபவசாலி' "இங்கு எப்போதும் வெந்நீர்தான் குளிப்பதற்கு!!'
என்று பதில் அளித்ததும். இப்போது தொத்தாவின் உடல்நிலை
எழுந்து நடமாடக்கூடியதாக இல்லை; பழையபடி இருந்திருந்தால்,
இந்நேரம் ஏழெட்டு முறையாவது வந்து பார்த்திருப்பார்கள்.
இந்த வயதில் நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து பரிவுடன்
பணிவிடை செய்யவேண்டியது முறை. ஆனால், நான் மேற்கொண்டுவிட்ட
கடமை, ஒரு மகன் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான்
செய்ய முடியாமலாக்கிவிட்டது. இதைத் தொத்தாவும், அம்மாவும்
உணர்ந்துவிட்டனர் என்பது என் உள்ளத்தில் எழும் சங்கடத்தைப்
பாதியாக்கிவிடுகிறது. இருந்தாலும், அவ்வப்போது மனம் உறுத்தியபடியும்
இருக்கத்தான் செய்கிறது. என் பொது வாழ்க்கைத் துறை என்னுடைய
இயல்புகளையே அடியோடு மாற்றிவிட்டது என்பதை அவர்கள் இருவரும்
மிக நன்றாக அறிவார்கள். தொத்தாவாகிலும், பேசித் தன் உணர்ச்சிகளைக்
கொட்டி விடுவதன் மூலம், மனதை அழுத்திக்கொண்டிருக்கும்
வேதனையை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்வார்கள். அம்மா அப்படி
அல்ல; மனதிலேயே வேதனையைத் தாங்கித் தாங்கித் தத்தளிக்கும்
நிலை எல்லாம் புரிகிறது. ஆனால் நான் மேற்கொண்டுள்ள கடமைக்காக,
இந்த வேதனையை அவர்களும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்
என்ற நிலை நிலைத்து விட்டது. இதிலிருந்து இனி விடுதலை
ஏது!
மற்றத் தடவைகளைவிட, இம்முறை
தொத்தா, மனதிலே இயற்கையாக ஏற்படக்கூடிய சங்கடத்தை ஒருபுறம்
ஒதுக்கி வைத்துவிட்டு, மிகக் கலகலப்பாக இருந்து என்னை
காஞ்சிபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தது, என் உள்ளத்துக்குப்
புதியதோர் எழுச்சியைத் தெம்பைக் கொடுத்தது. நல்ல காரியத்துக்காகப்
பணியாற்றுகிறான் மகன் என்ற பெருமிதம், அவர்களின் கண்ணொளியிலே
கண்டேன். என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டவர்கள்
முதுமையால் நலிவுற்று இருக்கும் நாட்களில் நான் இங்கு
வந்திருக்கிறேன். என் துணைவி ராணி, இம்முறை சிறையிலே என்னை
வந்து பார்த்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது கண்டு மிகவும்
சங்கடப்பட்டேன். வயதான இருவருக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கும்
பொறுப்பு உனக்கு, நீயே இப்படி இருக்கலாமா? என்று கேட்க
விரும்பினேன் - ஆனால், நான் மனைவி மக்களுடன், பேசிக்கொண்டிருக்க
அனுமதி கிடைத்ததே தவிர, எங்களுடன், இரண்டு சிறை "சூப்பரிண்டுகள்',
ஒரு ஜெயிலர், மற்றோர் அதிகாரி, இவ்வளவு பேர்கள் இருந்தார்கள்.
என் மூத்த மருமகப் பெண் சரோஜா இத்தகைய இடம்பற்றி, புத்தகத்தில்தான்
படித்திருக்க முடியும் - எனக்கு மருமகப் பெண்ணாக வந்த
பலன் - சிறையையும் வந்து பார்த்தாகிவிட்டது. மருத்துவக்
கல்லூரியில் படிக்கும் பரிமளமும், அச்சகப் பொறுப்பையும்
பரிமளம் பதிப்பக வேலையையும் கவனித்துக்கொள்ளும் இளங்கோவனும்,
உடன் வந்தனர். ஒவ்வொரு நாளும், நண்பர்கள் வருகின்றனர்
- ஆனால் வழக்கு முடிந்து தண்டனை என்று ஆகிவிட்ட பிறகு,
இப்படி அடிக்கடி வர முடியாது - பத்து நாட்களுக்கு ஒரு
முறைதான் பார்க்க முடியும். அந்தப் பழக்கம் கவனத்தில்
இருக்க வேண்டும் என்பதற்காகவே, ராணி, என்னை உடனடியாகச்
சைதாப்பேட்டை சிறையில் வந்து பார்க்க விரும்பியபோது, "வேண்டாம்
ஒரு வாரம் போகட்டும்'' என்று சொல்லி அனுப்பினேன். பல சொல்லிப்
பயன் என்ன! பொது வாழ்க்கைத் துறையில் முழுக்க முழுக்க
என்னை ஒப்படைத்துவிட்டேன் என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி
என் குடும்பத்தினர் தங்களுடைய நினைப்புகளைச் செப்பனிட்டுக்கொள்ள
வேண்டியதுதான்! வேறு முறை இல்லை!
சைதைச் சிறைக்கு நான் வந்து
சேர்ந்ததும், நண்பர் இராகவானந்தத்தின் மூலம், பல வசதிகளைப்
பெற முடிந்தது. என்னுடைய தலைமையில், சில ஆண்டுகளுக்கு
முன்பு கலப்புத் திருமணம் செய்துகொண்ட ராமச்சந்திரன் எனும்
தோழர், ரயில்வே துறையில் பணியாற்றி வருபவர், சைதையிலிருந்து
கொண்டு என்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டார்.
சைதைச் சிறையில் நான் இருப்பதை
அறிந்துகொண்ட கருணாநிதி, நாவலர், அன்பில் ஆகியோர் அங்கு
வந்தபோதுதான், காஞ்சிபுரத்திலிருந்து நான் புறப்பட்டபோது
வேறு வண்டியில் கிளம்பி வந்துகொண்டிருந்த நண்பர்கள் நடராஜன்
- கோவிந்தசாமி ஆகியோரும் "பிடிபட்டார்கள்' - சென்னைச்
சிறையில் அடைபட்டார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. மூலைக்கு
மூலை வலைவீசி, ஊருக்கு ஊர் திட்டமிட்டு, கழகத் தோழர்கள்
கைது செய்யப்பட்டு வருகிற செய்தி கேள்விப் பட்டேன். இவ்வளவு
"மதிப்பு' அளிக்கமாட்டார்கள், தி.மு.க. கிளர்ச்சி தன்னாலே
மங்கிவிடச் செய்வார்கள், என்று பேசிக்கொண்ட அரசியல் அப்பாவிகளை
எண்ணிச் சிரித்துக்கொண்டேன். தம்பி! அறப்போர் துவக்கமே
செய்யப்படவில்லை; அதற்குள் தமிழகத்தில் 2000 கழகத் தோழர்கள்
கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து நெல்லை வரை, சேலத்திலிருந்து
செங்குன்றம் வரை, கைது செய்யும் படலம்! பெரிய நகரம் மட்டுமல்ல,
சிற்றூர்களிலும்! கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஒரு
முறை நீயே தயாரித்துப் படித்துப்பார், தம்பி! கழகம் எவ்வளவு
உயிரோட்டம் உள்ள அமைப்பாக இருக்கிறது என்பது புரியும்;
உன் உழைப்பின் பலன் வீண்போகவில்லை என்பது விளங்கும். எத்தனை
வழக்கறிஞர்கள்! எத்தனை பட்டதாரிகள்! பஞ்சாயத்துத் தலைவர்கள்!
நகராட்சி மன்றத் தலைவர்! சட்டமன்ற உறுப்பினர்கள்! கண்ணியமான
வாழ்க்கை நடத்துபவர்கள்! கிராமத்தில் பெரிய குடும்பத்தினர்!
மளமளவென்று நாலு நாட்களில் 2000! இத்தனைக்கும், இந்தப்
பட்டியலில் நாவலரும், கருணாநிதியும், மதியும், மனோகரனும்,
அன்பழகனும், ராஜாராமும், செழியனும், தருமலிங்கமும், சண்முகமும்,
இப்படிப் பலர் இடம்பெறவில்லை. "முதல் ரவுண்டு' என்பார்களே
அதிலேயே 2000! கழகம்
கலகலத்துவிட்டது, பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கிறது
என்று ஓசை கிளப்பிக் கொண்டி ருப்பவர்கள், திகைத்துப் போகக்கூடிய
தொகை அல்லவா இது! திட்டமிட்டு நடத்தப்பட்ட அறப்போரில்
ஈடுபட்ட மொத்தப் பேர்களின் எண்ணிக்கை அல்ல? சர்க்கார்
பார்த்து, ஊருக்கு நாலு பேர்களையாவது பிடித்துப் பார்ப்போம்,
ஒரு பீதி ஏற்படுகிறதா என்ற முறையில் பிடித்தபோது தொகை
2000!!
எவ்வளவு வலிவு குறைந்த சர்க்காராக
இருந்தாலும், எத்துணை வலிவுடன் நடத்தப்படும் கிளர்ச்சியையும்
தடுத்துவிட முடியும் - முடிகிறது. இத்தகைய முறையில், கிளர்ச்சி
நடத்தப்படும் என்று முன்கூட்டியே, அறிவித்துவிட்டால்,
முன்கூட்டியே எவரெவர் ஈடுபடுவார்கள் என்று தகவல் கிடைக்கிறதோ,
எவரெவர் ஈடுபடக்கூடும் என்று யூகித்தறிய முடிகிறதோ, அவர்களை
முன்கூட்டியே பிடித்து அடைத்துவிட்டால்; கிளர்ச்சி நடைபெறாதபடி
பார்த்துக்கொள்ளலாம் - சர்க்கார் அதைத்தான் செய்கிறது.
செய்வது மட்டுமல்ல, சர்க்காரை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள
கட்சியின் தலைவர்களிலே சிலர் - அறிவுக்கரசர்கள் - ஏளனம்கூடச்
செய்கிறார்கள்; கிளர்ச்சி நடைபெறவில்லை!! - என்று.
கிளர்ச்சி நடைபெற்றிருந்தால்
எவ்வளவு பேர்களைப் பிடிக்கவேண்டி இருந்திருக்குமோ அதனைவிட
அதிக எண்ணிக்கையுள்ளவர்களைப் பிடித்து அடைத்துவிட்டு,
கிளர்ச்சி நடக்கவில்லை என்று பேசுவது, கேலிப் பேச்சிலேகூட,
மிக மிக மட்டரகம்! ஆனால் என்ன செய்வது?
மிக உயர்ந்த இடத்துக்குச்
சென்ற பிறகுகூட, சிலருக்கு இத்தகைய மட்டரகப் பேச்சுத்தான்
பேசமுடிகிறது! தங்கக் கலயத்திலே ஊற்றி வைத்தாலும், கள்
பொங்கி வழிந்து நாற்றம் வீசத்தானே செய்யும்? ஒரு கட்சி
நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, தோல்வியாகி விட்டது என்று
எப்போது கூறலாம் என்றால், அந்தக் கட்சி, கிளர்ச்சிக்கான
திட்டத்தை அறிவித்து அழைக்கும்போது, அந்தக் கிளர்ச்சியிலே
ஈடுபட ஒருவரும் முன்வரவில்லை என்ற நிலை ஏற்படும்போது.
இங்கு நாம் கண்டது என்ன?
கிளர்ச்சியின் துவக்கம் தொட்டிலில் இருக்கும்போதே, 2000
- கழகத் தோழர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட விந்தையை! இந்தத்
திருவிளை யாடலையும் செய்துவிட்டு, தி.மு.க. கிளர்ச்சிக்கு
ஆதரவே இல்லை, அனுதாபமே இல்லை, கிளர்ச்சி நடக்கவே இல்லை!
என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்!
மூலைக்கு மூலை மிரண்டோடி
2000 - பேர்களைச் சிறையிலே போட்டு அடைத்துவிட்டது மட்டுமா!
சிறையிலே அவர்களைப் போட்டுவிட்டு, காமராஜர் ஊரூருக்கும்
சென்று, கழகத்தவர்களை,
கோழைகள்
சூதாடிகள்
நாடோடிகள்
என்றெல்லாம் அர்ச்சிக்கும்
கைங்கரியத்தையும் வேகமாக நடத்தக் காண்கிறோம் (பத்திரிகைகளில்
பார்த்தேன்). கணவனை, மகனை, அப்பனை, அண்ணன் தம்பியை, மைத்துனன்
மாமனை, உறவினனை, சிறையில் தள்ளிவிட்டார்களே என்று வயிறு
எரிந்துகிடக்கும் தாய்மார்கள் காதுக்கு இவர் பேச்சு நாராசமாகத்தான்
இருந்திருக்கும். இப்படியும் ஈவு இரக்கமற்ற ஒரு சுபாவமா!
என்று கேட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ஆனால், இது
ஜனநாயகக் காலம். ஆகவே அவர் இந்த அளவோடு இருக்கிறார். நாக்கை
அறு! கை கட்டை விரலை வெட்டு! உயிரோடு போட்டுப் புதைத்துவிடு!
என்றெல்லாம் ஆதிக்கக் காரர்கள் ஆர்ப்பரித்த காலம் ஒன்று
இருந்தது. மகனைக் குத்திக் கொல்லச்செய்து, அந்தக் கோரத்தைத்
தாய்க்குக் காட்டுவது! குழந்தையைத் தூக்கி எறிந்து சாகடித்து,
அதைக் கண்டு பெற்றவள் மாரடித்து அழுவதைக் காண்பது! இப்படிப்பட்ட
காட்டுமிராண்டி முறைகள் இருந்தன! இப்போது ஜனநாயகக் காலமாக
இருப்பதால், சிறையிலும் தள்ளிவிட்டு, சீரழிவாகவும் ஏசிப்
பேசுவதோடு இருந்துவிடுகிறார்கள்.
இதெல்லாம் நல்லதற்கு அல்ல
என்றும், இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு என்றும், இந்த இலட்சணத்துக்கு
ஓட்டு வேறு வேண்டுமாம் என்றும்,
எத்தனை எத்தனை தாய்மார்கள்
சபித்தனரோ, எத்தனை பெரியவர்கள் மனம் நொந்து பேசினார்களோ?
யார் கண்டார்கள்!
இவைகளை எல்லாம், ஆளவந்தார்கள்
துச்சமென்று மதிப்பவர்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் தம்பி! இப்படிப்பட்ட அக்ரமத்தை அழித்திடும் அதிகாரம்
பெற்றவர்கள் பொதுமக்கள் - வேட்டு முறையால் அல்ல; ஓட்டு
முறையினால். அந்தப் பேருண்மையைக்கூட மறந்துவிடுகிறார்கள்.
ஆளவந்தார்கள்.
"கிளர்ச்சி நடத்தி இவர்கள்
கண்ட பலன் என்ன?' என்று கேலிபேசும் கண்ணியவான்கள், இதை
உணர வேண்டும். கிளர்ச்சிகள், ஆளவந்தார்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடிகள்!
"கிளர்ச்சிகள் வீண்போகா'
என்பதில் தொக்கியுள்ள பொருள் நிரம்பிய தத்துவம் இதுவே.