அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அப்போதே சொன்னேன்
3

“முத்துமாலையாம்; பத்தாயிரம் ரூபா விலை இருக்குமாம், அதுதான் இவனைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்குது...”

“முத்துமாலையா... அது என்ன புதுத் தகவலு...”

“அய்யோவ்! நம்ம சூளையிலே வேலை பார்க்கறானே வெள்ளை... தெரியுமேல்லோ. அவனுடைய சம்சாரம் இருக்காளே பூங்காவனம் தெரியுமேல்லோ... அவ கொண்டு வந்த தகவல் நான் இப்ப சொன்னது...”

“பூங்காவனம் என்ன சொன்னா...”

“அவ போயிருக்காய்யா நாட்டாமை வீட்டுக்கு; ஒரு வேலையா. அப்ப, இவ வந்திருக்கிற விவரம் தெரியாமப் படிக்கு, தங்கப்பனும் தருமாம்பாளும் பேசிக் கொண்டது, காதிலே விழுந்திருக்குது. அந்த முத்துமாலையைத் தூக்கி வடிவுக்கு உங்க அண்ணன் கொடுக்கறபோதே எனக்குச் சந்தேகம்; திருட்டுச் சொத்தாக இருக்கும் என்கிற சந்தேகம்னு தருமாம்பா சொல்ல, அதைக் கேட்டு தங்கப்பன், வீணா இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் மனத்தைக் குழப்பாதே; ஏற்கெனவே என் மனசு நொந்து கிடக்குதுன்னு சொல்ல, ஏன்! படகு மோட்டார்லே வந்திருக்கிறானே நம்ம அண்ணன் என்ற பூரிப்போ! என்று இடிக்க! அவன் மேலும் கோபமடைந்து உனக்குச் சாத்தப்பனைப் புரிந்துகொள்கிற அளவு மூளை கிடையாதுன்னு பேச, எனக்கு மூளை இருக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஜட்ஜு வேலை பார்க்கறதுக்குத் தேவையான மூளை இருக்குதான்னு நீங்க முதலிலே தெரிந்துகொள்ளுங்க என்று ஏச, தங்கப்பன் அவளை அடிக்கக் கையை ஓங்க, பயந்து போய் தருமாம்பாள் கூச்சலிட, ஒரே ரகளையாகி இருக்குது. பூங்காவனம் இதைப் பார்த்து விட்டு வந்திருக்கிறா...”

மறுநாள் காலைப் பத்திரிகையை வைத்துக் கொண்டு குத்தாலம் குழுவினர் மிக ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். முத்து மாலை பற்றிய முழு விபரமும் தரப்பட்டிருந்தது...

போலீஸ் அதிகாரியின் கடமை உணர்ச்சி

‘மைத்துனன்’ பிடிபட துணை நின்றார்

முத்துமாலை ‘மர்மம்’

என்ற கொட்டை எழுத்துத் தலைப்புகளுடன், சாத்தப்பன் சம்பந்தப்பட்ட விவரமான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சாத்தப்பன், வடிவுக்குத் திருமணத்தின்போது வர முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, விலையுயர்ந்த ஒரு முத்துமாலையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான்; அண்ணன் தந்த பரிசு என்று பூரிப்புடனும் பெருமையுடனும் அந்த முத்துமாலையை வடிவு தன் புருஷனிடம் காட்டியிருக்கிறாள்; முத்துமாலையைக் கண்டதும் களிப்படைந்து கணவன், மைத்துனன் சாத்தப்பனைப் புகழ்ந்து பேசுவான், காது குளிரக் கேட்கலாம் என்பது வடிவின் எண்ணம். வைரமாக இழைத்துத் தருகிற பொருள்தானே ஒரு பெண்ணுக்கு அதிக அளவு மகிழ்ச்சியையும் பெருமையையும் தரும். அதிலும் சப்-இன்ஸ்
பெக்டர் வேலை பார்க்கும் அவளுடைய கணவன் சபாபதி, ‘சம்பளம்’ போதும் என்ற போக்கினன். அதனால் ஊரிலே நல்ல பெயர் இருந்ததே தவிர, வடிவு மனம் மகிழும்படி ‘நகை நட்டு’ வாங்கித் தரக் கூடிய நிலை இல்லை. அதற்காகச் சபாபதி வருத்தப் பட்டுக் கொள்ளவும் இல்லை, பணம் பெருத்தவர்களிலே முக்கால் பகுதிக்கு மேல், பிடிபடாத குற்றவாளிகளே என்பது அவன் எண்ணம். அந்த எண்ணத்துடன்தான், அவன் சாத்தப்பனையும் பார்த்தான். அதிகமாகக் கூடப் பேசவில்லை. தனக்கு வேலை இருப்பதைக் கூறிவிட்டு சென்னை திரும்பிவிட்டான். சில நாட்களுக்குப் பிறகு தான் வடிவு வந்திருக்கிறாள் முத்துமாலையுடன்.

முத்துமாலையைக் கையிலே வாங்கிய சபாபதியின் கண் களிலே மகிழ்ச்சி பிறக்கவில்லை; குரலில் ஒரு குளுமை எழ

வில்லை; மாலையைக் கூர்ந்து கவனிப்பதும் எதையோ யோசிப்பதுமாகச் சில விநாடிகள் இருந்துவிட்டு,

“உன்னோட அண்ணன் கொடுத்ததா?” என்று கேட்டான்.

வேடிக்கை பேசுவதாக எண்ணிக் கொண்டு வடிவு “பின்னே! உங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தாரா?” என்று பதில் கூறினாள்.

கேலி நிரம்பிய முறையிலே சிரித்தபடி சபாபதி. “என் அண்ணன் எங்கே கொள்ளை அடித்தார். இதுபோல முத்து மாலையைப் பரிசு தர!” என்று கூறிவிட்டு, முத்துமாலையுடன் அவசரமாகத் தன் மேலதிகாரியிடம் சென்றார். கணவன் பேச்சின் பொருள் தெரிந்து கொள்ளாமல் வடிவு திகைத்துக் கிடந்தாள்.

மேலதிகாரியிடம் சபாபதி முத்துமாலையைக் கொடுத்து “எதிர்பாராத முறையில் கொடி கொண்டா கொள்ளை சம்பந்தமான துப்பு துலக்கக் கூடிய இந்த ‘முத்துமாலை’ என்னிடம் கிடைத்திருக்கிறது, நாலு வருஷங்களுக்கு முன்பு கொடி கொண்டா என்ற மலையூரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களிலே ஒன்று இந்த முத்து மாலை. முத்துமாலையின் ஒவ்வொன்றிலும், கொ, கொ, கொ. என்ற எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. கொடி கொண்டா கொள்ளிச்சாமி என்பதைக் குறிப்பதே கொ.கொ. கொ. என்ற எழுத்துக்கள். இவை என் மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தது என் மைத்துனன். அவள் அண்ணன், பல வருடம் வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தவன் பெயர் சாத்தப்பன்; பெரிய செல்வனாகக் காணப்படுகிறான். அவனைக் கைது செய்தால், நாலு வருடங்களாகத் துலங்காமலிருக்கும் ‘மர்மம்’ விளங்கி விடும்” என்ற விவரம் கூறியிருக்கிறான். மேலதிகாரி, சபாபதியின் கடமை, நேர்மை ஆகியவற்றைப் பாராட்டிவிட்டு, சாத்தப்பனைக் கைது செய்திருக்கிறார். இந்த விவரம் அவ்வளவும் தரப்பட்டிருந்தது பத்திரிகையில். சபாபதியின் படம், மேலதிகாரியின் படம், முத்துமாலையின் படம், கொள்ளச்சாமியின் படம், கொடி கொண்டாமலையின் படம். மடத்தின் படம், சாத்தப்பன் படம் இவை பத்திரிகையிலே போடப்பட்டிருந்தன. இதழ் தந்த தகவலைப் படித்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

படித்தவன் - பணம் சேர்க்கும் வித்தையிலே வேறு கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான் - இருந்தும் திருட்டுச் சொத்து எப்படியும் பிடிபட்டுவிடும் என்று கூடவா தெரிந்து கொள்ளாமலிருப்பது.

எப்போதோ நடந்த கொள்ளைதானே - இன்னமுமா அது பற்றிய நினைப்பு இருந்து கொண்டிருக்கும் என்ற எண்ணமாக இருக்கும்.

சீமானாகி விட்டோம். இனி, எவன் நம் மீது சந்தேகப்படப் போகிறான் என்ற நினைப்பு.

தங்கை புருஷன் போலீஸ் அதிகாரி! திருட்டுச் சொத்து, அவனிடம் இருந்தால், யார் சந்தேகப்பட்டுப் பிடித்து விடப் போகிறார்கள் என்ற விதமான அசட்டுத் தைரியம்...”

ஊரார் இப்படிப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

எல்லோரும் வழக்கு நடைபெறும் நாளை மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.

பாவம்! தங்கப்பன் முகத்திலே ஈயாடவில்லை. இருக்கு மல்லவா வேதனையும் வெட்கமும் என்று பலர் பேசி வந்தனர்.

தங்கப்பன் உள்ளபடி மிக வேதனையுடன் காணப்பட்ட டான்.

நீங்க ஏன் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வது! கூடப்பிறந்தவன் கூண்டிலே கிடக்கிறானே என்ற வருத்தமா! இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டவே கூடாது என்று மனைவி கூறக் கேட்டு, தங்கப்பன் கொதித்துக் குமுறினான்.

போதும், உன்னுடைய தர்மோபதேசம்... என் வேதனையைக் கிளராதே... என்று கோபித்துக் கொள்டான்.

அந்தப் பெண்ணோட ஜாதகம் நல்லதாக இருக்கவே இந்த இழிவு அதற்கு வந்து சேராமலிருந்தது. முதலிலே, இந்த சாத்தப் பனுக்குத்தானே இந்தப் பெண்ணைக் கட்டுவதாக இருந்தார்கள்! என்று குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு தொடங்கியது; ஏம்பா! நான்தான் அப்போதே சொன்னேனே! மிராசுதாரர் பலே சாமார்த்தியசாலின்னு... இந்தப் பயலோட எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று முன்னதாகவே மிராசுதாரருக்குத் தெரிந்திருக்குது, அதனாலேயேதான், சமயம் பார்த்து ஆசாமியை விரட்டிவிட்டு தன்னோட மகளை, தங்கப்பனுக்குக் கொடுத்திருக்கிறார்! அனுபவம்; அறிவு.

அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. முதலிலே நினைத்தபடி சாத்தப்பனுக்கே அந்தப் பெண்ணைக் கொடுத்திருந்தா, இந்நேரம் என்ன ஆகியிருக்கும் மிராசுதாரரோட கௌரவம்? பஞ்சு பஞ்சாகப் பறந்து போயிருக்குமே! ஊர், சிரிப்பா, சிரிக்குமே சிரித்திருக்குமே. நல்லவேளை, தப்பித்துக் கொண்டார்.

குளத்தங்கரை மாநாட்டிலே இப்படிப்பட்ட பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, சிறையிலே தள்ளப்பட்டிருந்த சாத்தப்பன், உடன் இருந்த குற்றவாளிகளுடன், ஒரு கவலையுமில்லாமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான்.

உடனிருந்தவர்களிலே பெரும்பாலானவர்கள், ‘அந்தஸ்து’ காரணமாக உயர் வகுப்புச் சிறையிலே இருந்தனர்.

இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள், மோசடி செய்த வணிகர் கள், கள்ள நோட்டு அடித்த கனவான், கோயில் நகையைத் திருடிக் கொண்டு முலாம்பூசிய நகையைக் கோவிலிலே மாற்றி வைத்துவிட்ட எத்தன், இப்படிப்பட்டவர்கள், சாத்தப்பனின் சகாக்கள், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், தம்மீது ‘அபாண்டம்’ சுமத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெளிவில்லாத
வராக இருந்ததால், தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினர். ஒருவர் இருவர் மட்டுமே, ஏதோ போதாத வேளை - புத்திகெட்டு விட்டது - தவறு செய்து விட்டேன் - அனுபவிக்கிறேன் முன் - ஜென்ம வினை - என்று கூறினர்.

சொத்து திருட்டுச் சொத்துதான்... தெரியும்... ஆனால் களவாடியது நான் அல்ல... ஆனால் என்ன...? யார் களவாடினால் என்ன? என்னால் தண்டனையை அனுபவிக்க முடியும். ஆகவே நான் தண்டனையைப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறேன்... என்ற சாத்தப்பன் சொல்லக் கேட்டு, இதை என்ன, வேதாந்தம் என்று கொள்வதா, மனக் குழப்பம் என்று சொல்லுவதா என்று தெரியாமல் அந்தக் கைதிகள் திகைத்தனர்.

மடத்திலே கொள்ளை அடிக்கப்பட்ட சொத்து என்பது உண்மையா? என்ற கேள்விக்குத் துளியும் பதறாமல் சாத்தப்பன், ‘இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது!’ என்று பதிலளித்தான். மேற்கொண்டு எந்த விவரமும் தரமறுத்து விட்டான்.

சிறைக்குச் சென்று சாத்தப்பனைப் பார்த்துவிட்டு வந்து மோட்டார் டிரைவரிடம், குத்தாலம் குழுவினர், புதுத் தகவல் தெரிந்து கொள்ள எப்படி எப்படியோ கிளறிப் பார்த்தனர். எந்த விஷயமும் சொல்ல மறுத்துவிட்டான்.

எப்படி அப்பா உன் எஜமானர் இருக்கிறார்? என்று குத்தாலம் கேட்டதற்கு, டிரைவர், ‘அவருக்கென்ன, ‘ராஜா’ போல நிம்மதியாகத்தான் இருக்கிறார் என்று மட்டுமே பதிலளித்தான்; வழக்கு என்ன ஆகும் என்பது பற்றிக் கூடப் பேச மறுத்துவிட்டான்.
* * *

கோர்ட் கூடிற்று. திரளான கூட்டம்.

“சாமிகளே! இந்த முத்துமாலை, தங்களுடையது தானே”

‘அபசாரம்! அபசாரம்! நான் - எனது - என்ற மயக்கத் திலிருந்து நான் விடுபட்டவன். என்னுடையது என்று எதுவும் இல்லை”

“சுவாமிகளே! அது சிலாக்கியமான வேதாந்தம்... போற்றப்பட வேண்டிய தத்துவம். ஆனால், இப்போது நாம் ஒரு கொள்ளை பற்றி வழக்கினை விசாரித்துக் கொண்டிருக் கிறோம். அதனால், உண்மையைச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முத்துமாலை, தங்கள் மடத்திலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதானே...”

“நான் இருக்கும் இடத்தை மடம் என்றும், இந்த நச்சுப் பொருளை முத்துமாலை என்றும் பேதைகள், பெம்மான் அருள் பெறாதவர்கள் பேசுவர்.”

“எமது பொறுமையை மிக அதிக அளவு சோதிக்க வேண்டாம், சுவாமிகளே! தங்களுக்கு எந்தப் பொருள் மீதும் பற்று இருக்காது; உணருகிறோம். ஆனாலும் களவு, கொள்ளை போன்ற குற்றம் செய்திடும் சமூக விரோதிகளைத் தண்டித்தாக வேண்டும். அதுதான் நியாயம். அந்த நியாயம் வெற்றி பெறத் தாங்கள் உதவி செய்திட வேண்டும். தங்கள் மடத்திலிருந்து பல விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளை போய்விட்டது! உண்மைதானே... போலீசில் வழக்குப் பதிவாயிற்றே. ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?...

எம்மானின் ஜோதிஸ்வரூபத்தைக் காணாதோரே, பொன் என்றும், மணி என்றும், வைரம் வைடூரியம் என்றும், முத்து என்றும் பவழம் என்றும் பிதற்றுவர் அப்பனே! என் கண்களுக்கு எல்லாம் ஒன்றாகவே தெரிகிறது, கொள்ளை நடந்ததாகக் கூறுகிறீர்கள். நான் அறியேன்... என் கண்முன் தெரிவதெல்லாம் ஐயன்! ஐயன்! ஐயன்! எங்கும் ஐயன்! எப்போதும் ஐயன்! எதிலும் ஐயன்! ஐயனின்றி வேறில்லை...”

கோர்ட்டிலே சிலரால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. நீதிபதிக்கே கூடச் சங்கடமாக இருந்தது.

சாத்தப்பன், தன் பார்வையை, சாமியாரிடமே பதித்து வைத்திருந்தான்.

வழக்கறிஞர் எத்தனை பணிவாகவும் சாமர்த்தியமாகவும் கேள்விகளைக் கேட்டும் கொள்ளிச்சாமியாரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

வழக்கு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குளத்தங்கரை மாநாடு கூடிற்று.

“அப்போதே சொன்னேன் அல்லவா, இந்தச் சாத்தப்பன் மீது உள்ள குற்றத்தை ருஜுப்படுத்துவது கடினம் என்பதாக! கோர்ட் திணறுவதைப் பார்த்தீர்களால்லவா என்று குத்தாலம் கேட்டார்.

“என்னமோ இதிலே சூது இருக்கத்தானே செய்யுது, பெரிய வேதாந்தம் பேசுகிறானே அந்தச் சாமியார் - என்று மகமது கூறினான்.

“இந்தச் சாமிக்கு என்ன பைத்தியமா... கேட்கிற கேள்விக்குத் தாறுமாறா பதில் பேசுதே... தத்துவம் பேசற இடமா-, கோர்ட்டு...”

“போய்க்கேள் அந்தச் சாமியாரை... என்னைக் கேட்டா...”

எப்பவும் இப்படித்தானா, ஏடாகூடமான பேச்சு... இப்ப இந்தச் சாமியாரு ஒரு வாக்குமூலமும் கொடுக்காது போனா, உங்க அண்ணனைத் தண்டிக்க முடியாது, இல்லையா...

ஏன் எங்க அண்ணன் கட்டாயமாகத் தண்டிக்கப் பட்டாக வேண்டுமா...?

குற்றத்தைச் செய்தவங்க தண்டனையை அனுபவிப்பது தானே நியாயம்...!

நியாயத்தை அப்படியே கரைத்துக் குடித்துவிட்டது போலப் பேசாதே.

முத்துமாலை, உங்க அண்ணனிடம் இருந்ததுதானே, அது கொள்ளை போன பொருள்தானே.

நீ சொல்லுற அப்படி, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள் என்று.

நான் மட்டுமா சொல்கிறேன். இந்த ஊரே சொல்லுது.

ஆனா எந்தச் சாமியார் மடத்திலே இருந்து இந்தப் பொருள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுதோ, அந்தச் சாமியார் அப்படிச் சொன்னாத்தானே...

பார்! பார்! அந்தச் சாமியாருடைய வாயிலே இருந்து உண்மை கக்கிக் கொண்டு வருதா இல்லையான்னு. கோர்ட்டா, கொக்கா! போதும் உன்னோட ஞானோபதேசம், உண்மையைச் சொல்லய்யான்னு போடுவாங்க பத்து; முதுகிலேயும் கன்னத்திலேயும்.

தங்கப்பனுக்கும் அவன் மனைவிக்கும் இப்படி ஒரு வாக்குவாதம்.

எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனாக இருந்தாலும் அண்ணனிடம் ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது என்று எண்ணி தருமு, தன் கணவனுடைய சிலாக்கியமான குணத்தைப் பற்றி வேலையாட்களிடம் எடுத்துப் பேசக் கேட்ட தங்கப்பனின் முகத்தில் வேதனைக்குறிகள் மேலும் ஆழமாகப் பதிந்திடலாயின.
* * *

ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு... டிரைவரிடம் வெகு கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் ஒரு தகவல் என்று பேச்சைத் துவக்கினான் மகமது.

அவன் பெரிய அழுத்தக்காரனாச்சே, ஒரு தகவலும் கொடுப்பதில்லையே...

அவனா கொடுத்தான்! அமிர்தா ஓட்டல் ஸ்வீட்டும், காரமும், ‘டிகிரி’ காபியுமல்லவா கொடுத்தது என்று கூறிவிட்டுச் சிரித்தான். மேலும் விவரம் தரலானான். முடியவே முடியாது. வேண்டவே வேண்டாமென்றுதான் டிரைவர் சொன்னான். ஆனால் மிகவும் வற்புறுத்தி அமிர்தா ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போனேன்... அப்போது வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிப்பேசி பக்குவப்படுத்தி, கடைசியில் முக்கியமான ஒரு தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன், அது என்ன வென்றால், இந்த டிரைவரிடம் தங்கப்பனுக்கு ஏகப்பட்ட பயமாம் அவன் சொல்கிறான். என் எஜமானர் சாத்தப்பனுடைய கால் தூசுக்குக்கூட சமமாக மாட்டார் உங்கள் தங்கப்பன். இவ்வளவு எதற்கு என்னைக் கண்டாலே கூட உங்கள் தங்கப்பனுக்குப் பயம். வெட்கம் என்கிறான்” மகமது சொன்னான்.

இது பெரிய புதிர்தானப்பா! நீ சொல்வதைப் பார்த்தால் இந்த டிரைவருக்கும் தங்கப்பனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கவேண்டும்போல அல்லவா இருக்கிறது என்றார் குத்தாலம்; கூறிவிட்டு நான் அப்போதே சொன்னேனே கவன மிருக்கிறதல்லவா, தங்கப்பன் இந்த டிரைவரிடம் அதிக அளவு மரியாதை காட்டுகிறான். தேவையில்லாத அளவு மரியாதை! என்று கூறினான்.
* * *

தம்பி கூடத்தான் சொல்கிறான். ஜாமீனில் போகலாம். ஏற்பாடு செய்கிறேன் என்று. ஆனால் நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன், என்று சாத்தப்பன் சிறையிலிருந்த தன் சகாக்களிடம் கூறினான். வெளியே சென்றால் வழக்கை நடத்த ‘தோதாக’ இருக்குமே என்று சிலர் கூறியபோது கூட சாத்தப்பன் அதெல்லாம் என் டிரைவர் வெளியே இருக்கிறான், கவனித்துக் கொள்வான் என்று சமாதானம் கூறினான்.
* * *

வழக்குமன்றத்தில் சுவாமிகளிடம் எந்த வாக்குமூலமும் வாங்க முடியாத நிலையே நீடித்துக் கொண்டிருந்தது சாத்தப் பனைக் காட்டி வழக்கறிஞர்.

“சுவாமிகளே! இவரைத் தெரியுமா உங்களுக்கு. இவர் பெயர், தொழில், இவரைப் பற்றிய விவரம் கூற முடியுமா? இவர் தங்கள் மடத்திற்கு வந்ததுண்டா? என்றெல்லாம் கேள்விக் கணைகளை விடுத்தார். சாமிகள் இவர் யார்? நான் யார்? நீ யார்? எல்லோரும் அவன் பிள்ளைகள்! அவனோ யாருக்கும் பிள்ளை அல்ல! அவன் ஆட்டுவிக்கிறான். நாம் எல்லோரும் ஆடுகிறோம். அவன் அடக்கினால் எல்லோரும் அடங்குகிறோம். சூரியனை அடக்குகிறான். சந்திரனைத் தேய்க்கிறான். அலையை எழுப்பு கிறான் - ஆயிரத்தெட்டு அற்புதங்களையும் ‘ஐயன்’ செய்கிறான். முத்துமாலையைத் தருபவனும் அவனே, அதைக் களவு போகச் செய்பவனும் அவனே! கூண்டில் நிற்பவனுக்கு அவன்தான் பொறுப்பு. எதிரே நிற்பவர்களுக்கும் அவன்தான் பொறுப்பு என்று பழையபடியேதான் பதில் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில், நீதிபதிக்கே கோபம் பிறந்து, கேள்விகளுக்குப் பொறுப்பான முறையில் பதில் அளிக்காவிட்டால் கோர்ட்டை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்குரிய தண்டனை தரப்படும் என்று கூற நேரிட்டது. அப்போது ‘சுவாமிகள்’ இடி இடியெனச் சிரித்து, அதுவரை அந்தக் கோர்ட்டும் நீதிபதியும் கேட்டறியாத வேதாந்தப் பேச்சினைப் பொழிந்து தள்ளினார்.
* * *

என்ன இருந்தாலும் அண்ணன் தம்பி என்ற பாசம் விடாது என்பார்களே, அது உண்மைதான். பாரேன், தங்கப்பன் இந்த வழக்கு முடியும் வரையில் ‘லீவ்’ போட்டு விட்டு இங்கேயே தங்கி விட்டிருக்கிறான் என்று குத்தாலம் பேச்சைத் துவக்கினார்.

அதிசயம் அதிலேகூட இல்லை; வழக்குமன்றத்திலே சாத்தப்பனும் தங்கப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பார்வையைக் கவனித்தீர்களா... சாத்தப்பன் பரிதாபத்துடன் பார்க்கிறான் தங்கப்பனை, தங்கப்பன் பார்வையிலே பயம் தெரிகிறது. இது அதிசயமில்லையா என்று சின்னப்பன் கேட்டார்.

பயத்துக்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. சாத்தப்பன் தண்டிக்கப்பட்டு விட்டால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுமே என்பது பற்றி ஏற்பட்ட பயமாகத்தான் இருக்கும் என்று குத்தாலம் விளக்கமளித்தார்.
* * *

நீங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும், ஒரே மரத்திலே ஒரு பழம் ருசியாகவும், மற்றொரு பழம் புளிப்பாகவும் இருப்பதை உலகம் காணவில்லையா, அதைப்போல இந்தக் குடும்பத்திலே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு போகிறார்கள். அண்ணனுக்கு பெயர் கெட்டு விட்டால் நமக்கும் தானே கெட்ட பெயர் என்று ஏன் எண்ணி வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் விட்டுத் தள்ளுங்கள் என்ற தருமு கூறிடக் கேட்ட, தங்கப்பன், ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் தருமு உனக்கு இருக்கும் நெஞ்சழுத்தம் எனக்கு இல்லை. உன்னாலே ஒரு பொருளை விரும்பவும் முடியும், பிறகு அதே பொருளை வெறுக்கவும் முடியும். இரண்டுக்கும் உன் மனம் இடம்கொடுக்கும். அந்தத் துணிவு எனக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்றான் துக்கம் தோய்ந்த குரலில்.